Sunday, April 18, 2010

ஜார்ஜ் சிர்டெஷ் கவிதை. தமிழில் ஆர்.அபிலாஷ்

(சமீபத்தில் நடந்த பனிமுலை இலக்கிய கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை)


அம்மா



சுவர்க்கத்தில் இருந்து கீழ்வரும் முதல் கை அவள் கை
அவள் உனக்கு மேல் வட்டமிடுகிறாள். அது வரப்போகும் வாழ்வின்
முன்னுணர்வு, தரை இறங்க தயாராகும் ஒரு பறவை।


உன் அம்மாவின் வெம்மை. அவள் முலைகள் மென்மையின்
தீவிரம் பற்றின மனப்பதிவு, பிறகு அவளது
கைமுட்டின் எலும்புகள்। கன்னங்கள். கழுத்து. அவள்


தலையின் அசைவு, இடுப்பின் முன்பின் ஆட்டம். அவள் முலைக்கண்களின்
மிருதுவான கூம்புகள். அவள் தொப்புளின் புதிர்த்தன்மை. வெப்பம்
குளிர்மை, ஈரம், உலர்வு। பால் மணங்களும், பிரமோன்களும்.


எங்கு நீ ஆரம்பிப்பாய்? பாதங்களை விரல்கள் கிச்சுகிச்சு மூட்டுவதிலா
உதடுகள் தோலில் படுவதிலா? உயரத் தூக்கப்பட்டு
பத்திரமானதற்கு பின் சுழற்றப்படுவதிலா? தெருவின் இரைச்சல்களிலா?
உனது எளிய பேரிடர்களில்? உனது சொந்த அழுகை
உன் தலைக்குள் எதிரொலிக்க கேட்பதில்?

ஏதோ தொலைந்து போய்
ஏதோ ஆழ புதைக்கப்பட்டு உள்ளது நீ பார்க்க முயலும் விழியின் அடியில், உன் நுரையீரலுக்கு உள்ளே
படிந்த தூசு போன்ற மெல்லிசாக ஒன்று,
உன் உடலின் மடிப்புகளுள் வார்ப்பு போல திணிக்கப்பட்ட ஒரு வரலாறு.
வானொலி முணுமுணுக்கிறது। ஒரு மணி திடீரென முழங்குகிறது.


தரைக்கு மேல், கூரை மேல் நகரும் ஒளி.
ஒரு பறவை சரசரக்கிறது. அவளது கூந்தல். ஜன்னல் மீதாக
முட்டிடும், வீறிடும் ஒரு மரத்தின் கிளைகள்.

1 comment:

  1. ’அம்மா’ கவிதைகள் எனக்கு பிடிப்பதில்லை... ஏனோ இது பிடித்திருக்கிறது

    ReplyDelete