Sunday, July 25, 2010

அவர்கள் வேறொரு காலத்தைச் சேர்ந்தவர்கள்- பிரவீண்


அவர்கள் வேறொரு காலத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒரு புள்ளியிலிருந்து மறு புள்ளிக்கானது அவர்களது பயணம்.
அவை எதையும் இணைப்பதில்லை.
ஒரு நதியின் கோடையிலிருந்து அதன் பிறிதொரு பருவத்திற்கு
கனிகளின் மௌனத்திலிருந்து இலைகளின் விளையாட்டிற்கு
தன்னிச்சைகளின் ஒரு திசையிலிருந்து பிறிதொரு திசைக்கு
பல சுழல்கள் கொண்டது அவர்கள் பயணம்.
அவர்கள் பிரக்ஞையில் வரலாறோ மொழியோ கிடையாது.
நட்சத்திர ஒளியின் காமம் மலர்ந்த இரவுகளும்
அதிகாலையில் கவித்துவம்கொள்ளும் மரங்களுமே
அவர்களின் மனப்படிமங்கள்.
அரிதாக அவர்களைக் கடந்து செல்லும்
நீல இறகுப் பறவைகள் அவர்களின்
நன்னிமித்தங்கள் ஆகி வருகின்றன.
பிரபஞ்சத்தின் ஒரு மௌனப் புள்ளியில்
திரளாக அசைந்து செல்கிறார்கள்
வேறொரு காலத்தின் தொலைவிலிருந்து
வேறு விழிகளால் கவனிக்கப்படுவதையோ
வேறு மொழியால் வாசிக்கப்படுவதையோ
அவர்கள் அறிவதில்லை.
இன்னும் பிறக்காத ஒரு மொழியின் முதற் படிமங்கள்
அவர்களுக்குள் வெடிக்கும்போது
புதிய உன்மத்தமும் கிறுக்கும் பிடிக்க
அவர்களது காலம் உடைந்து போகலாம்.
தற்போது
சூரியன் அத்தமிக்கும் மலை முகட்டின் பின்னணியில்
நகர்ந்து கொண்டிருக்கும் சிறிய கருங்கோடு
அவர்கள்தான்

Sunday, July 4, 2010

ராவணன்: கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதை - மாமல்லன் கார்த்தி




ராவணன்(சிறப்புக் காட்சி ): அதிகாலை நாலரை மணி, கோவில் நடை திறப்பதற்காக காத்திருக்கும் பக்தகோடிகளை போல, மடை திரண்டு வந்திருந்தார்கள் விக்ரம் ரசிகர்கள். நடை திறந்ததும், கூச்சலும் கும்மாளமும் வானவேடிக்கைகளும் கேட்கவே வேண்டாம். படம் துவங்கியது. ஐந்து நிமிடத்திற்குப் பிறகு சத்தமே இல்லை, அவ்வளவு ஒன்றிப்போய் படம் பார்க்கிறார்கள் என்று நினைத்தேன், இடைவேளையில் விளக்குகள் போட்டதும் எல்லோரும் துயிலேளுந்தார்கள், பின் பாதியில் எங்களை தட்டி தட்டி எழுப்பினார்கள் மணிரத்னமும் ரஹ்மானும்..ஒரு வழியாக எங்களை பார்க்க வைத்துவிட்டார்கள்.

புராண இதிகாசங்களில் இருந்தும் இன்னபிற சர்வதேச இத்யாதிகளில் இருந்தும், கதைச்சரடைப் பின்னி.. நாட்டில் தற்போது நடக்கக்கூடிய முக்கிய பிரச்சனை ஒன்றை, பிரச்சனையே இல்லாமல் சொல்லிவிட வேண்டும் என்று, பறவையின் பார்வையில் (birds view) அந்த துக்கம் நிறைந்த காடுகளை கடந்து (escape) செல்கிறார் மணி. பழைய மாவையே வேறுவிதமாக அரைத்து மசாலா தடவ முயற்சித்திருக்கிறார், ஆனால் மாவு புளிப்பு தட்டி விட்டது. படத்தில் சித்தரிக்கப்பட்ட உலகத்தில் ஒரு நம்பகத்தன்மை இல்லாதது.. உண்மையில் இது ஹிந்தி மொழிக்காக செய்யப்பட்டதால் இருக்குமோ என்று நினைக்க வைக்கிறது.. சுஹாசினியின் வசனங்கள் அவ்வப்போது பெண்ணிய நிலைப்பாடுகளை பற்றி கதைக்கிறது.. இருந்தும் என்ன பிரயோஜனம்?.. ராகினி (ஐஸ்..) தன் பத்தினித்தனத்தை நிரூபிக்க வேண்டியதாக உள்ளதே..?(அதிலும் ஒரு சிண்டு முடிக்கிறார் மணி.. அதாவது வீராவை பிடிபதற்காக அவளது கணவன் போடும் நாடகமாம் அது.. பேத்தல்!). இன்னொரு கொடுமை வேறு உள்ளது, படத்தில் கடைசி வரை வீரா (விக்ரம்) ராகினியை தொடுவதே இல்லையாம்.. ஆனால் படத்தில் வரும் மற்ற குண்டர்கள் சகட்டுமேனிக்கு அவளை பிடித்திழுகிறார்கள், வீரா மட்டும் அவளை தொடாமலேயே தொட்டுவிட்டு பாதாளலோகத்தை சென்றடைகிறான். கவித்துவம்!!

படம் எனக்கு பல படங்களின்(apocalypse now, rashomon, north by north west, crouching tiger hidden dragon இன்னும் தோண்டினால் நிறைய கிடைக்கும் போல), பல கணங்களை நினைவு படுத்தியது, முக்கியமாக 'காதல் கொண்டேன்' . அந்த கிளைமாக்சை (climax) செல்வராகவன் 'உணர்வுரீதியாக' மிக சிறப்பாக செய்திருந்தார் என்று தோன்றுகிறது.

படத்தின் அடி நாதம் என்ன? ஒடுக்கப்பட்ட ஒருவனுக்கும், மேல் தட்டில் வாழும் ஒருத்திக்கும் (இந்த படத்தில் பழங்குடியினனுக்கும்-உலக மயமாக்கத்தில் இருப்பவளுக்கும்) ஏற்படும் நூல் இழையிலான அன்பும், காதலும், பரிதாபமும்..அவர்களின் உறவு தான் சூட்ச்சமம்... இந்த காரியத்தை ஒரு வகையில் செல்வராகவனின் 'காதல் கொண்டேன்' படத்தில் செய்திருக்கிறார்.. வினோத்(தனுஷ்) ஒடுக்கப்பட்ட வலியினால் மனசிக்களுக்குள் இருப்பவன்.. அவனது கதாபாத்திர வார்ப்பு நம்பகத் தன்மையுடன் இருந்தது.. வினோதிற்கும் திவ்யாவுக்கும் உள்ள உறவின் அலைகழிப்புகளை, போராட்டங்களை மிக வலிமையாக சொல்லி இருந்தார்.. மணிரத்தினம் அவர்களோ, தன் புரட்சி செய்யும் மகோன்னதமான கதாபாத்திரத்தை ஒரு பைத்தியத்தை போல் உளற வைத்து கேவலப்படுத்திவிட்டார் என்றே கருதுகிறேன்..அழகான காட்சிகளையும், நடனங்களையும் பாடல்களையும் வைத்துக்கொண்டு எத்தனை நேரம் தான் ஓட்ட முடியும்..? 360 degree'யில் தேவையில்லாமல் காமெராவை வைத்துக்கொண்டு circus விளையாட்டை காண்பித்துக் கொண்டிருந்தார் மணி..முக்கியமான உணர்வெழுச்சி மிக்க சில காட்சிகளை, நம்மை சேர விடாமல் தடை செய்துவிட்டார்.. சந்தோஷ் சிவனை வீணடித்துவிட்டார். ' நீர்' என்பதை ஒரு குறியீடாக 'Terorist' படத்தில் சந்தோஷ் சிவன் பயன்படுத்தியிருந்தார்.. அது தன் மூல கதாபாத்திரத்தின் உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த மாற்றத்தை பிரதிபலிப்பதற்கு மிக சரியாய் பொருந்தியது.. ஆனால் ராவணனில் அது ஒரு விளம்பர படத்தில் வருவது போன்று செயற்கையாக மாறிவிட்டது. அது ஒரு வித்தை என்பதைத் தவிர ஒன்றும் இல்லை.. ரஷிய திரைமேதையான் தார்கொவிஸ்கி(Tarkovsky) தனது படங்களில் 'நீரை' நம் பிரபஞ்சத்தின் குறியீட்டுத் தன்மையுடன் உள்ளார்ந்த கவித்துவத்துடன் மாற்றி இருப்பார்.. அங்கிருந்து தாக்கத்தை உள்வாங்கிக் கொண்ட சந்தோஷ் சிவன் Terorist படத்தில் புரிதலோடு செய்திருந்தார்.. இராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய் தனது நீர்கோர்த்த கூந்தலை அவள் முகத்தின் முன் தலைவிரி கோலமாக கொண்டுவரும் காட்சி அப்படியே தார்கொவிஸ்கியின் Mirror படத்தில் இருந்து சுட்டது. ஒரு கலைப் படைப்பில் இருந்து உருவி எப்படி ஜீவனற்ற சரக்காக மாற்றுகிறார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம் .

மணிரத்னம் அவர்களின் வார்த்தையில் சொன்னால் 'Direction is like management' . மணிரத்னம் ஒரு தேர்ந்த வியாபாரி, சினிமா ஊடகம் சார்ந்த அழகியலை, தான் கண்டு ரசித்த உலகப் படங்களின் நுட்பங்களை, தான் இயங்குகிற தளத்திற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் புலமை உடையவர். அந்த வகையில் அவர் ஒரு 'skilled filmmaker என்று சொல்லலாம். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் இன்னும் popular cinema'வில் முன்னிலையில் உள்ளவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அந்த வகையில் அவருக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. மேலும், அவர் ஒரு தெளிவோடு இயங்கி வருகிறார், அவருக்கு எது கலை -எது வியாபாரம், -தான் எங்கு இருக்கிறோம் என்ற உண்மை தெரிந்திருக்கிறது. இயக்குனர் சேரனை போன்று 'தென்னகத்தின் சத்யஜித் ரே' என்று போஸ்டர் ஒட்டும் காரியங்களில் என்றுமே அவர் ஈடுபட்டதில்லை. அதே போல் அவர் எங்கிருந்து சுடுகிறார் என்ற கேள்விக்கும் சரியான பதில் அளிப்பதில்லை. அதை தாண்டி அவர் சுடும் படங்களுக்கு அவர் பெரும்பாலும் நியாயம் செய்வதில்லை. நம் நாட்டில் லஞ்சம் வாங்குவது சகஜம் தானே! அதையெல்லாம் யாரவது சொல்லிக் கொண்டா இருகிறார்கள்? it has become legitimate. Tarantino'வை எடுத்துக்கொண்டால், அவன் தனக்குப் பிடித்த எல்லாவற்றிலிருந்தும் சுடுகிறான், அது ஒரு தந்தையிடம் மகன் எடுத்துக்கொள்ளும் உரிமையை போன்றது. அந்த உயிர்ப்போடு அது இருக்கிறது, அது தன் ரசிபபுக்குளிருந்து தனிச்சையாக மலர்வது, அது சிருஷ்டி. அங்கே தந்திரங்கள் ஏதுமில்லை. ஊழல் கிடையாது(No corruption).

ராவணன் படத்தின் பின் இருக்கும் நடிகர்களின், தொழில்நுடக் கலைஞர்களின் சிரத்தையை பற்றி சொல்லத் தேவையில்லை. இதற்காகத்தான் இத்தனை இம்சைகளை அனுபவித்தார்களா என்று ஆச்சர்யப்பட்டேன், மேலும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது, ஐஸ்வர்யா ராய் என்ற நடிகையை கண்டாலே தலை தெறிக்க ஓடும் நான், அவரின் பங்களிப்பை சகித்துக் கொண்டேன்.. பிரபுவையும் கார்த்திக்கையும் காமெடியன்களாக ஆக்கிவிட்டார் மணி. என்ன சொல்வது, படம் பத்து நாள் நன்றாக ஓடினால் போதும், கல்லா கட்டிவிடலாம் என்று நினைத்துவிட்டார் போல!!

இணையத்தளத்தில் தற்போது வந்து கொண்டிருக்கும் இராவணன் விமர்சனங்களை படித்து வருகிறேன்.. முடியல!! சும்மா எடுத்ததற்கெலாம் 'making is superb' என்கிறார்கள்..

நான் கேட்கிறேன்: அய்யா! நம் மணிரத்தினம் அவர்கள் இருபத்தி ஐந்து வருடங்களாக சினிமாவில் இருப்பவர், அவரது செய்நேர்த்தி நாம் அறிந்ததே, அவர் பயன்படுத்தும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யாவரும் இந்தியாவில் சிறந்தவர்கள், சந்தோஷ் சிவன், ஸ்ரீகர் பிரசாத், ரஹ்மான்.. என்று நீள்கிறது... இவர்கள் கூட்டணியில் இது கூடவா வராது?..இதைத் தாண்டி படத்தில் என்ன இருக்கிறது என்று கேட்டால், கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம், சீதாயணம் என்று காமெடி பண்ணுகிறார்கள்.. சரி..இதெல்லாம் வைத்துக்கொண்டு என்ன சொல்கிறீர்கள் என்றால்.. அரசியல்!! என்று ஒரு குண்டைப் போடுகிறார்கள், வீரப்பன், நக்சலைட் இயக்கம், இலங்கை பிரச்சனை, என்று சொல்லி நம்மை துன்புறுத்துகிறார்கள்.. சட்டியில் ஒன்றும் அப்படியில்லை..ஏன் வெறுங்கையில் முழம் போடுகிறார்கள்?.. மணிரத்னம் படமெடுதிருக்கும் காடுகளில் காணப்படும் குண்டுகளும் குழிகளும் போல, அவரது திரைக்கதை பல சரிவுகளோடு உள்ளது.. இதை வைத்துக்கொண்டு என்னென்னமோ அரற்றுகிறார்கள்..என்னை பொறுத்த வரையில் இராவணன் ஒரு ஜீவனற்ற சவம்.. அந்த சவத்தின் அலங்காரங்களை கொஞ்சம் ரசிக்கலாம்.. மணிரத்தினம் படங்களில் முன்பு இருந்த 'ஓட்டை அரசியல்' கூட இதில் இல்லை .. உண்மையை சொன்னால் ஒன்றுமே இல்லை.. அவர் பல விஷயங்களை சொல்ல வந்திருக்கலாம், ஆனால் எதுவுமே நம்மை சேரவில்லை, வந்தடைய வில்லை.. அதன் இல்லாத அரசியலையோ.. சோர்வூட்டும் அழகியலையோ..பற்றி பேசுவதில் எனக்கு விருப்பம் இல்லை.

அய்யா! படத்தின் சூத்திரம் இது தான் : "ஒரு நல்லவன் - கெட்டவன், உண்மையில் கெட்டவனுக்கு ஒரு பெரிய நியாயம் இருக்கிறது, இவர்கள் இடையில் ஒரு பெண்- சல்லாபங்கள், சஞ்சலங்கள்,மோதல்கள்..அவள் நினைப்பது போல் அவன் கெட்டவன் அல்ல என்று புரிகிறது , கடைசியில் ஊருக்காக உழைத்த அந்த கெட்டவன் பரிதாபமாக, அனாதையை போல் சாகிறான்.." இது தானய்யா formula..!! இதை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்?.. location புதிதாக மாற்றலாம், சில சித்து விளையாட்டுக்களை செய்யலாம்..இதிகாச அல்லது அரசியல் சாயம் பூசலாம்.. நல்ல விலைக்குப் போகக்கூடிய சரக்கை உற்பத்தி பண்ணலாம் ..அவ்வளவு தான்.!!.

cinemams@gmail.com

மாமல்லன் கார்த்தி கவிதைகள்











என் நகர்புறத்து மஞ்சள் இரவில்
ஒரு கோவில் திருவிழாவின் தெய்வீக ஓலம்
மிரண்டோடி வந்த
நாய்கள்
என்னை விநோதமாய் பார்த்தன
***********************************

அவள் பொம்மைகளை நேசிக்கத் துவங்கிய நாள் எதுவென்று அறிந்திருக்கவில்லை
நினைவில் தங்காத ஏதோ ஒரு நீண்ட தனிமையைத் தாழிட்டுக்கொள்ள
பொம்மைகளை நாடியிருந்தாள்
முதிர் கன்னியின் உடல் வாகும்
முதிராத உள் மனமும் கொண்டிருந்தாள்
பொம்மைகளோடு பேச முடிந்ததும்
முத்தமிட்டு விளையாட முடிந்ததும்
புரண்டு படுத்து அனைத்துக் கொள்ள முடிந்ததும்
இறுகிச் சிதறும் மௌனங்களில் கட்டி அழ முடிந்ததும்
அவளுக்கு பெரும் ஆசுவாசம் தந்தது
மூப்படையாத, எதிர்த்துப் பேசாத
பொம்மைகள்
மனித உறவுகளை விட மேலானதாக எண்ணினாள்
மயங்கிக் கிடந்த
மாலைப் பொழுதொன்றில்
என்னையும் பொம்மைகளோடு சேர்த்துக் கொண்டாள்
சிரிக்கும் பொம்மைகளை பார்த்துப் பழகி இருந்தவள்
கண்ணீர் விடும் பொம்மைகளை கண்டதில்லை
பரவசம் கொண்டு குதித்துக் கை தட்டினாள்
பொம்மைகளின் உலகத்தில்
நான் தான் தலைவன்
என்று சொல்லி கருணை முத்தமொன்றை அளித்தாள்
cinemams@gmail.com

Friday, July 2, 2010

மதன் கவிதைகள்

மலைப்பாம்பின் மௌனம்
















சிகப்புக்கும், மஞ்சளுக்கும் இடையே
அமைதியாயிருந்தது
மஞ்சளுக்கும், பச்சைக்கும் இடையே
என்ஜின் உறுமல்களில்
சூடேறிக் கொண்டிருந்தது.


மலைப்பாம்பாய்ப்
பருத்துப் படுத்திருந்தது
வேகத்தடையொன்று.
சிக்னலின் சாத்தியங்களைப்
புறக்கணித்தபடி.


தற்காப்பு



வயலெட் நிறப் பூக்கள்
இறைந்து கிடக்கும் பூங்காவைக்
கடக்கையிலெல்லாம் அவற்றைக்
கை நிறைய அள்ளி வரும்
ஆசையை கவனமாய் தவிர்த்து விடுகிறேன்


பூக்களின் கீழே
உதிர்ந்து கிடக்கும்
நினைவுகளின் பயத்தால்

Thursday, July 1, 2010

கதவுகளற்ற வீடு - ஆர்.அபிலாஷ்





வாசலின் குறுக்காய் தூங்க பிரியப்படும் பூனை

கதவுகளை மூடப் போவதாய் மிரட்டினாலோ

பலம் பிரயோகித்தாலோ

அன்றி

இரு திசைகளில் ஒன்றை

தேர்ந்திட விரும்புவதில்லை

Wednesday, June 2, 2010

அவனுடைய நாற்பத்து மூன்றாவது பிறந்தநாளுக்கு பிறகு - நளினி சங்கர்

















திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும்
அவன் அம்மாவின் கடிதங்களின் வருகை
குறைந்து போயிருந்தது.

எப்பொழுதாவது உணவகங்களில் கை கழுவும்போதோ
முடிதிருத்தத்தின்போதோ
பார்க்க நேரும் கண்ணாடிகள் மீது
அவனுக்கு குற்றச்சாட்டுக்கள் உண்டு.
அவைகள் அவனுடைய முகத்திற்கு பதிலாக
வேறு ஏதோ ஒரு முகத்தை காண்பிக்கின்றதாம்.

இப்போதெல்லாம்
எதிர்ப்படும் எந்த மார்பகங்களும்
அவனை கிளர்ச்சியடையச் செய்வதில்லை.
நீண்ட நேரம் அடக்கி வைத்துக்கொண்டிருந்து
சாவுகாசமாக கழிக்கும்
சிறுநீரின் சுகமே
அவனுக்கு போதுமாய் இருக்கின்றது

Wednesday, May 19, 2010

குரலிழக்கும் வார்த்தைகள் - கதிர்பாரதி




கொஞ்ச காலமாய் என் கூடவே
வசித்துவருகிறது நீ கண்டறியாத மவ்னம்

மவ்னம்தான் எனினும்
உனக்குச் சொல்லும் சம்மதமில்லை
மரணம் விதைக்கும் மவ்னத்தைப் போன்று அது
துக்க நிறத்தைப் பூசிக்கொண்டதுமில்லை

மவ்னம் உடைபடும் பின்னொருசமயத்தில்
அதற்குள் கனலும் வெப்பத்தாலும்
வெடிக்கக் காத்திருக்கும் கேள்விகளாலும்
அதிரக்கூடும் உன் கள்ள மவ்னம்

போராளியின் கடைசிக்குண்டைப் போல
பிரயோகமாகப் போகும் அம்மவ்னம்
பருந்தை எதிர்த்தடிக்கும் தாய்கொழிஎன
தோற்றம்கொள்ள காத்திருக்கிறது

அப்போதெழும் பேரோலத்தில்
உன் வார்த்தைகள் குரலிழந்து போகும்

Friday, April 23, 2010

தற்கொலைப் பிரியங்கள் - மதன்




பிரியங்களைப் புதைத்து வைக்கும் பூங்காக்கள்
பிரியங்களைப் பூட்டி வைக்கும் கதவுகள்
பிரியங்களைப் பிரித்து வைக்கும் தீர்ப்புகள்
பிரியங்களை உடைத்து விடும் அனுமானங்கள்
பிரியங்களால் உடைந்து விட்ட தன்மானங்கள்
பிரியங்களை உருக்கி விடும் வார்த்தைகள்
பிரியங்களை எரித்து விடும் சந்திப்புகள்
பிரியங்களைச் சிதைத்து விடும் சந்தேகங்கள்
பிரியங்களைக் கிழித்து விடும் வாக்குவாதங்கள்
பிரியங்களில் விரிசலிடும் கடிதங்கள்
பிரியங்களை அசைத்து விடும் போட்டிகள்
பிரியங்களைக் கசக்கி விடும் பருவங்கள்
பிரியங்களைச் சுருக்கி விடும் போதைகள்
பிரியங்களை இறுக்கி விடும் பயணங்கள்
பிரியங்களைத் தொலைத்து விடும் பரஸ்பரங்கள்
பிரியங்களைக் கலைத்து விடும் முத்தங்கள்
பிரியங்களைப் பிய்த்து விடும் சுயங்கள்
பிரியங்களைத் தவற விடும் இச்சைகள்
பிரியங்களைப் பிளந்து விடும் ஆத்திரங்கள்
பிரியங்களை மூழ்கடிக்கும் புரிதல்கள்
பிரியங்களைச் சாய்த்து விடும் பிடிவாதங்கள்
பிரியங்களை நிறுத்தி விடும் முரண்பாடுகள்
பிரியங்களை இழந்து விடும் தோள்கள்
பிரியங்களைக் கவிழ்த்து விடும் ஆசைகள்
பிரியங்களை நொறுக்கி விடும் இயலாமைகள்
பிரியங்களைப் பிழிந்து விடும் கடமைகள்
பிரியங்களை ஒடித்து விடும் நீங்கள்
பிரியங்களைத் துரத்தி விடும் நான்கள்
பிரியங்களைக் கொன்று விடும் நாம்கள்
யாவற்றையும் விட
பிரியங்களால்
தற்கொலையுண்ட
பிரியத்தின்
ரணமே கொடிதாகிறது

இயல்பாய் இருப்பதில் - செல்வராஜ் ஜெகதீசன்




ஆண்களேதுமின்றி
அழகிய பெண்ணொருத்தியோடு
ஆறேழு மாடி வரை
பயணிக்க நேர்ந்திருக்கிறது.

இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்த
இரண்டு பெண்களுக்கிடையிலும்
இருக்க நேர்ந்திருக்கிறது
எத்தனையோ முறை.

முழுக்கவும் பெண்கள் சூழ
மேற்கொண்ட பயணங்களுமுண்டு.

ஆகக்கூடி வாய்த்த
அத்தனை லிப்ட் பயணங்களிலும்
அடியேன் கண்டெடுத்தது
நண்பர்களே!

இயல்பாய் இருப்பதில்
இருக்கும் அத்தனை
சிரமங்களையும்.

ரூத் ஸ்டோன் - சிறுகுறிப்பு



ரூத் ஸ்டோன் 1915-இல் வெர்ஜீனியாவில் பிறந்தார். பிங்ஹேம்டன் பல்கலையில் ஆங்கிலப் பேராசிரியர். அவரது சமீபத்திய கவிதை நூல்கள் Second Hand Coat (Yellow Moon Press), Who Is the Widow’s Muse (Yellow Moon Press) மற்றும் Simplicity (Paris Press). ரூத் 2002-இல் Wallace Stevens விருதை பெற்றார். Bess Hokin Award, Shelley Memorial Award, Vermont Cerf Award, National Book Critics Circle Award, மற்றும் the National Book Award ஆகியன இவர் மேலும் வென்றுள்ளவை.

ஒரு கணம் - ரூத் ஸ்டோன் (தமிழில் ஆர்.அபிலாஷ்)



நெடுஞ்சாலைக்கு குறுக்கே வெள்ளம் சூழ்ந்த வயலில் ஒரு நாரை நிற்கிறது. அது சிந்தனையில்
ஆழ்ந்தது போல், ஒற்றைக் காலில், அசட்டையாக
ஏதோ அவ்வயலே நாரைகளுக்கு சொந்தம் என்பது போல் நிற்கிறது.
காற்று தெளிவாய் நிசப்தமாய்.
இந்த இரண்டாம் வறண்ட நாளில் பனி உருகுகிறது.
அம்மாவும் மகளும்,
நாம் வாகன நிறுத்துமிடத்தில்
டோனட்ஸ் மற்றும் காபியுடன் அமர்ந்துள்ளோம்.
நாம் மௌனமாக உள்ளோம்.
ஒரு கணத்திற்கு நம்மிடையே உள்ள சுவர்
பிரபஞ்சத்திற்கு திறக்கிறது;
பிறகு மூடுகிறது.
மேலும் நீ தொடர்ந்து சொல்கிறாய்
உனக்கு என் வாழ்வை திரும்ப வாழ வேண்டாம்.

நன்றி: The Best American Poetry 1999

Monday, April 19, 2010

ஜி. நாகராஜன் குறத்தி முடுக்கு - உடலின் ஆன்மா. - பிரவீண்


ஜி. நாகராஜன் குறத்தி முடுக்கு - உடலின் ஆன்மா.


நாவல் என்பதே ஒரு மத்தியதர வர்க்க வடிவம் என அறியப்பட்ட காலம் ஒன்று உண்டு.இங்கு மத்தியதர வர்க்கம் என்பது ஒரு பொருளியல் மட்ட மக்கள் திரளை குறிக்கவில்லை.மத்தியதர வர்க்கம் என்பது அது சார்ந்த ஒரு மன நிலை, உறைந்த மதிப்பீடுகள் , , தினசரித்தன்மை முதலியவற்றையும் சுட்டுகிறது. தமிழ்ப் புனைவு வெளியில் குறிப்பாக மணிக்கொடி – எழுத்து என்ற தடத்திலான ஒரு நவீனத்துவ உருவாக்கத்தில் இந்த மத்தியதர வர்க்க மனோபாவத்தின் மேலாண்மையை மறுப்பதற்கில்லை.குறிப்பாக தமிழ் நாவல் வெளியில் மனம் சார்ந்த நெருக்கடிகளின் நூற்றுக் கணக்கான கோலங்கள் காணக்கிடைக்கும் அளவுக்கு உடல் சாந்த வன்முறைகள் , அதன் மீதான சமூக கலாச்சார நிறுவனங்ளின் ஒடுக்குமுறைகள் குறித்த கவனஙகளை காண இயலுவதில்லை. வரலாறு எனும் பெரும் திரையில் மனித உடலின் வலியும் துடிப்பும் மிக்க நடனத்தைத் தமிழ் நாவல் மிக அரிதாகவே தொடுகிறது.வடிவத்தில் எத்தனைப் புதுத் திறப்புகள் வந்தாலும் அனுபவம் சார்ந்த தீவிரமான விரிந்த வாக்கைத் தளங்கள் இல்லாதபோது கலைரீதியாக ஒரு படைப்பு கொள்ளும் முடக்கம் இரங்கத்தக்கது. ஆனால் உலக நாவல் மேற்குறித்த நடுத்தர வர்க்கத் தன்மையைத் தாண்டி எத்தனையோ உயரங்களைத் தொட்டுவிட்டது. நவீன வாழ்க்கையின் நுண்களங்களைத் தீண்டவும், , சமூகம் வரலாறு பண்பாடு என்ற பின்னலான வெளியில் மனித சலனங்களை பிரதிபலிக்கவும், வாழ்வின் எல்லையின்மையை அகலத் தழுவி விரியும் விவாத வெளியை கட்டமைக்கவும் மிக நெகிழ்ந்ததும் உரையாடல் தன்மை வாய்ந்ததுமான ஓர் உயர் கலை வடிவம் நாவல்தான் என்பதை உலக நாவல் வரலாறு நிரூபித்திருக்கிறது.



தமிழ் நவீனத்துவத்தின் கட்டுபெட்டித் தனங்களுக்கு எதிராக, உள்ளிருந்து எழுந்த தீவிர குரல்களாக வெளிப்பட்ட ஜி. நாகராஜன், பிரமிள் முதலியோர் சராசரித் தன்மைக்கு எதிரான தங்கள் கவர்ச்சிமிகு வாழ்விலிருந்தும் ஆளுமையிலிருந்தும் நம்மை ஊடுருவுகின்றனர். இங்கு ஜி.நாகராஜனை எடுத்துக் கொள்ளும் போது குடுமப எல்லைகள் தாண்டாத ஒரு தமிழ் நவீனத்துவத்திற்குள் உருவாகி வந்த நாவலின் நிறுவப்பட்ட மரபுகளுக்கு எதிராக அவரது பயணம் தொடங்குகிறது. ஜி. நா. வின் படைப்புலகம் முதலில் பௌதிகமான நிலைமைகளில் இயங்காத நவீனத்துவ புனைவுகளின் மனவெளியிலிருந்து, குருதியும் தசையுமாய் அதிர்ந்து கொண்டிருக்கும் சமூக எதார்த்தங்களின் அடிமட்டத்திற்கு தரைஇறங்குகிறது.அப்படித்தான் குறத்தி முடுக்கு தமிழ்ப்புனைவில் ஒரு புதிய திறப்பாக வருகிறது. அது காட்டும் உலகம் நவீனத்துவத்தின் அறிவார்த்த நாகரீகத்தின் அதிர்ச்சிமிக்க பின்தோற்றம்.வரலாற்றின் இக்கட்டத்தில் மனித உடல்களின் புதிய அதிர்வுகளை அது ஏந்துகிறது. அங்கு நவீன யுகத்தின் கோட்பாட்டுத் தர்க்கங்களும் , கற்பித லட்சியங்களும் சிதறிக் கொண்டிருக்கின்றன. சுதந்திரம், சட்டம், சமூக ஒழுங்கு, காவல், நீதி, நிர்வாகம் என்ற நவீன சமூக கண்ணாடிக் கவர்ச்சிகளின் ஆழ்த்தில் ஒளிந்திருக்கும் கைப்பையும் வன்மங்களையும் அது அகழ்ந்தெடுக்கிறது. குறத்தி முடுக்குவில் பேசப்படுவன எல்லாம் உடல்கள். அவை இந்த நவீன சமூக அதிகாரங்களின் அதிகபட்ச வன்முறைகளுடன் தம் அடிப்படை வாழ்விச்சைகளோடு மோதியபடியே தம் தினசரியில் நவீன வாழ்வின் புதிர்மிக்க நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன.இதுதான் குறத்தி முடுக்கின் களம்.. இதன் மீதான ஒரு கோடிட்டுக் காட்டல்தான் தங்கம் என்ற பாலியல் தொழிலாளிக்கும் பெயர் சுட்டப்படாத ஒரு பத்திரிக்கையாளனுக்கும் இடையிலான, மரபான வடிவங்களில் பிடிபடாத ஒரு காதலின் புதிர்மிக்க சலனங்கள்.


இந்தப் பத்திரிக்கையாளன் வாழ்க்கை பற்றி சில தெளிவுகள் கொண்டவன். காமத்தை ஒரு இச்சை தீர்ப்பு என்பதுக்கு அப்பால், அதில் காதலின் மாய சிறகுகள் முளைப்பதற்கான சாத்தியங்களை ஏற்க மறுப்பவன்.
ஆனால் தங்கதுடனான உறவில் இவனது அனைத்து தர்க்கங்களும் சிக்கலடைந்தபடியே வருகின்றன. இச்சை என்ற எளிய கோலத்தில் தொடங்கும் அவன் தஙத்துடனான உறவில் மெல்ல மெல்ல காதலின் உயர்படி நிலைகளைக் கண்டடைகிறான். அனால் இவனது குணவார்ப்பின் எதிர்நிலைதான் தங்கம்.அவள் இறுதி வரை சமநிலை குலையாத ஆளுமை வார்ப்பு பெற்றவள்.அவளது காதல் எத்தகையது...அது உணர்ச்சிகளின் முகடுகளும் அகடுகளும் அற்ற ஒரு நேர்க்கோடாக இருக்கிறது.ஆனால் அவன் நாவல் முழுக்க இடறிக் கொண்டே இருக்க சலனமற்ற ஒரு புதிராக தங்கம் இறுதிவரை நிலைகொள்கிறாள். இந்த முரண் இவ்விருவருக்கிடையே வாழ்வின் அற்புதமான பகடையாட்டத்தை ஆடிக் காண்பிக்கிறது.இங்கு தான் ஜி. நாகராஜன் வாழ்க்கையை மிக அரிய கோணங்களில் நமக்கு வாசித்து காட்டுகிறார்.


மேலும்...
உயர்ந்த கலைப்படைப்புகள் பசி, காமம் முதலிய மனிதத்துவத்தின் மிக ஆதாரமான பிரச்சனைகளையே மைய்யமிடுகின்றன. சிலம்பு மணிமேகலை போன்ற தமிழ்ப் பேரிலக்கியங்கள் இதன் உயர் லட்ச்சிய வடிவங்கள் எனலாம். மனிதன் வரலாற்றின் வழி வந்தவன். இயற்கையிலிருந்தும் உயிரியல்புகளிலிருந்தும் மிகச் சேய்மைபட்ட கலாச்சார வாழ்வியலை வந்தடைந்திருப்பவன். இந்த நவீன மனிதனுக்குள் உள்ளுறைந்திருக்கும் தொல்பண்பையும் உயிரிச்சைகளில் கலாச்சார மயக்கங்களற்ற நிர்வாணத்தன்மையையும் வெளிக்கொணரத்தான் சிறந்த கலைப்படைப்புகள் முயல்கின்றன. மனிதனுக்குள் காணாமல் போன தொல்மனிதனை தொட்டுவிட ஒருவகையில் இலக்கியங்கள் முயல்கின்றன. ஜி. நா. வின் குறத்தி முடுக்கு உள்ளிட்ட படைப்புகள் இந்த திசையில் செல்வதாகத்தான் படுகிறது. குறத்தி முடுக்குவில் மீண்டும் மீண்டும் பேசப்படுவது காமமும் பசியும்தான்.


மனித உடல் ஓர் உயிரியல் அமைப்பு மட்டுமல்ல.அது ஒரு சமூக வரலாற்று பண்பாட்டுக் கட்டமைப்பாக இருக்கிறது.சமூக மதிப்பீடுகளை கடத்தும் ஊடகமாகவும் கலாச்சார புனைவுகளைக் கற்பிதங்களை ஏற்று அதன் ஒழுங்குமுறைகளை , நடத்தை விதிமுறைகளை பிரதிபலிக்கும் பாத்திரங்களாகவும் மனித உடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இக்கட்டுக்க்களிலிருந்து விடுவித்து மனித உடலின் ஆதி இயற்கைத்தன்மையை, வேட்கையை அதன் குழந்தைமையை, இசைமையை மீட்ட பாலியலை மையமிடும் சிறந்த கலைப்படைப்புகள் முயல்கின்றன. பெண்ணியவாதிகள் இக்கோணத்தில் உடலரசியல் என்ற கூரிய பரிமாணத்தில் பேசி வருவதை நாம் அறிவோம்.
குறத்தி முடுக்குவில் ஆளப்படும் பாலியலும் இந்த தளத்தை நோக்கி நகர்ந்து வருவதை உணர முடிகிறது .மனித சமூகத்தில் காமம் ஒரு இயற்கை நடவடிக்கையாயன்றி பால் சார், பண்பாடு சார் புனைவுகளும் அதிகாரங்களும் கொண்டவையாய் நிகழ்கிறது. பதற்றங்களும் தன்முனைப்பும் நிறைந்த இந்த நாடகீயமான காமத்தின் ஆழத்தில் மனிதத்துவத்தின் துடிப்புமிக்க களங்கமற்ற பால் விழைவை ஜி. நா.வின் எழுத்து எப்போதும் மீட்டெடுக்கிறது. அரசியல்மயமாகப்பட்ட பாலியலை திரைவிலக்கி அதன் ஆழத்தில் துளிர்க்கும் ஆதிமனத்தின் அன்பை அது எப்போதும் துளிர்க்கச்செய்கிறது.



குறத்தி முடுக்குவின் எந்த கதாபாத்திரங்களும் முழுமையாக குணவார்ப்பு பெற்றவையல்ல. அவை மூட்டமான நிழலுருவங்களாகவே வந்து செல்கின்றன, ஒவ்வொரு வாழ்விலிருந்தும் ஜி. நா காண்பிப்பது ஒரு வெட்டுக் காட்ச்சி மட்டுமே. அனால் அவை இட்டு நிரப்ப வேண்டிய கணமான இடைவெளிகளை வாசகத் தரப்பில் நிறுத்துகின்றன.ஒவ்வொரு பாத்திரமும் காமத்தின் ஆழத்தில் ஒளிரும் காதலையும் காதலின் பாசாங்கில் மறைந்துள்ள காமத்தையும் மாறி மாறி வெளிப்படுத்தும் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.


பாலியலை கலையின் ஓர் உயிர்ப்பகுதியாக வைத்துப் பேணிய கலைப்பாரம்பரியம் நமது எனினும் பாலியலை மனித அறிவாதிக்கத்திலிருந்து விடுதலை செய்யும் முயற்சிகள் மிக அரிதாகவே நிகழ்ந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டு புனைகதைப் பரப்பை நோக்கும்போது கு.ப.ரா., தி.ஜா., ஜெயகாந்தன் முதலிய முன்னணிப் படைப்பாளிகள் நம் நினைவுக்கு வரலாம். கு.பா.ரா பாலியலைத் தாண்டிய இலட்சிய நிலைப்படுத்தப்பட்ட காதலைத்தான் முன்வைக்கிறார். தி.ஜா. பாலியலை எழுதும்போது அதில் ஒரு நிலமானிய கால ரசனை ரேகையொன்று ஓடுவதை மறுப்பதற்கில்லை. ஜெயகாந்தன் பாலியலை கையாளும்போதெல்லாம் வெளிப்படும் அவரது அறிவார்த்த முனைப்புகள் சலிப்பூட்டக் கூடியது. முழுக்க முழுக்க ஒரு விளிம்பு நிலை வாழ்விலிருந்து, பாலியலின் அரசியலை உரித்து, மனித இயல்பூக்கங்களை பேச விழையும் ஜி. நாகராஜனின் படைப்புலகம் முன்குறித்த எதன் சாயலுமற்ற முன்னுதாரணங்களற்ற புதிய பிரதேசத்தை அறிமுகப்படுத்துகிறது.



குறத்தி முடுக்குவின் இறுதிப் பகுதி ஒரு உருவகமான காட்சியோடு நிறைவுறுகிறது. தனக்குள் காதலின் பேரலைகளை எழுப்பிவிட்டு தன் பழைய கணவனோடு வாழச்சென்றுவிட்ட தங்கத்தைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்த அந்தப் பத்திரிக்கையாளன் அவளது வீடு வரை சென்று ஒரு விருந்தாளியின் அசௌகரியத்தோடும் அந்நியத்தோடும் இருந்துவிட்டு அறைக்குத் திரும்புகிறான். தங்கத்தின் தேர்வுகள் அவனது தர்க்கங்கள் அனைத்தையும் சிதறடிக்கின்றன. வாழ்வின் எந்த நிலையிலும் குலையாத அவளது சமனிலை
முன் அவன் கொந்தளிக்கிறான். ஆற்றாமை..ஏமாற்றம்…அறையில் அவனுக்குத் தூக்கமில்லை.இறங்கி வெளியே நடக்கிறான்… தொலைவில் ஒரு மின்னல் வெட்டுகிறது..’ தொலைவில் நிகழ்ந்த ஒரு மின்பரிமாற்றம்’ என்கிறார் ஜி. நா. அது அவனுக்குள் நிகழ்ந்துள்ள பெரும் குணமாற்றத்தை சூசகமாக உணர்த்துகிறதா. மின்னல் வெட்டிவிட்டது.ஆனால் இடிச்சத்தம் இன்னும் கேட்கவில்லை. தான் எவ்வளவு மாறிவிட்டோம் என்பதை அவன் உணர்கிறான்.ஆனால் அதன் தர்க்கம் இன்னும் அவனுக்குப் புலப்படவில்லை. மழை அடித்துப் பேய வேண்டும் என நினைத்துக்கொள்கிறான். அவன் மனதை நிரப்பும் அந்த கணமான வெக்கையை அது ஒன்றே அப்போதைக்குப் போக்க முடியும்.

Sunday, April 18, 2010

ஜார்ஜ் சிர்ட்டெஷ் பற்றின சிறுகுறிப்பு - ஆர்.அபிலாஷ்



ஜார்ஜ் சிர்ட்டெஷ் தனது எட்டாவது வயதில் ஹ்ங்கெரியிலிருந்து அகதியாக இங்கிலாந்து வந்தார். ஓவியராக பயிற்சி பெற்ற சிர்ட்டெஷ் 1973-ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் கவிதைகள் பிரசுரிக்க ஆரம்பித்தார். இவரது முதல் கவிதைத் தொகுப்பான The Slant Door ஜெப்ரி பேபர் மெம்மோரியல் பரிசை வென்றது. பிறகு சோல்மொண்டெலெய் விருது இவருக்கு வழங்கபபட்டது. இங்கு தரப்பட்டுள்ள கவிதைகளை உள்ளடக்கின அவரது Reel தொகுப்பு 2004-இல் டி.எஸ்.எலியட் பரிசை வென்றது. ஹங்கெரியன் மொழியிலிருந்து செய்துள்ள ஆங்கில மொழியாக்கப் பணிக்காக இவர் European Poetry Translation Prize மற்றும் Derry Prize ஆகிய பரிசுகளை வென்றார். Golden Star விருதும் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கான எழுத்திலும் ஆர்வம் காட்டியுள்ளார். தற்போது மல்யுத்தம் பற்றி நாவல் எழுதி வரும் சிர்ட்டெஷ் University of Ear Anglia-வில் கவிதை மற்றும் படைப்பிலக்கியம் பயிற்றுவித்து வருகிறார். மேலும் படிக்க: http://www.georgeszirtes.co.uk/

ஜார்ஜ் சிர்டெஷ் கவிதை. தமிழில் ஆர்.அபிலாஷ்

(சமீபத்தில் நடந்த பனிமுலை இலக்கிய கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை)


அம்மா



சுவர்க்கத்தில் இருந்து கீழ்வரும் முதல் கை அவள் கை
அவள் உனக்கு மேல் வட்டமிடுகிறாள். அது வரப்போகும் வாழ்வின்
முன்னுணர்வு, தரை இறங்க தயாராகும் ஒரு பறவை।


உன் அம்மாவின் வெம்மை. அவள் முலைகள் மென்மையின்
தீவிரம் பற்றின மனப்பதிவு, பிறகு அவளது
கைமுட்டின் எலும்புகள்। கன்னங்கள். கழுத்து. அவள்


தலையின் அசைவு, இடுப்பின் முன்பின் ஆட்டம். அவள் முலைக்கண்களின்
மிருதுவான கூம்புகள். அவள் தொப்புளின் புதிர்த்தன்மை. வெப்பம்
குளிர்மை, ஈரம், உலர்வு। பால் மணங்களும், பிரமோன்களும்.


எங்கு நீ ஆரம்பிப்பாய்? பாதங்களை விரல்கள் கிச்சுகிச்சு மூட்டுவதிலா
உதடுகள் தோலில் படுவதிலா? உயரத் தூக்கப்பட்டு
பத்திரமானதற்கு பின் சுழற்றப்படுவதிலா? தெருவின் இரைச்சல்களிலா?
உனது எளிய பேரிடர்களில்? உனது சொந்த அழுகை
உன் தலைக்குள் எதிரொலிக்க கேட்பதில்?

ஏதோ தொலைந்து போய்
ஏதோ ஆழ புதைக்கப்பட்டு உள்ளது நீ பார்க்க முயலும் விழியின் அடியில், உன் நுரையீரலுக்கு உள்ளே
படிந்த தூசு போன்ற மெல்லிசாக ஒன்று,
உன் உடலின் மடிப்புகளுள் வார்ப்பு போல திணிக்கப்பட்ட ஒரு வரலாறு.
வானொலி முணுமுணுக்கிறது। ஒரு மணி திடீரென முழங்குகிறது.


தரைக்கு மேல், கூரை மேல் நகரும் ஒளி.
ஒரு பறவை சரசரக்கிறது. அவளது கூந்தல். ஜன்னல் மீதாக
முட்டிடும், வீறிடும் ஒரு மரத்தின் கிளைகள்.

ஜார்ஜ் சிர்டெஷ் கவிதை. தமிழில் - ஆர்.அபிலாஷ்

(சமீபத்தில் நடந்த பனிமுலை இலக்கிய கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை



அப்பா என்னை ஒரு வயலுக்கு குறுக்காக ஏந்திச் செல்கிறார்

அப்பா என்னை ஒரு வயலுக்கு குறுக்காய் ஏந்திச் செல்கிறார்।

அது இரவு, மேலும் அங்கு பனி நிறைந்த பதுங்கு குழிகள் உள்ளன।

கெட்டியான சேறு. இதுவரை என்னவென எனக்குத் தெரியாத ஒன்றிலிருந்து
மறைந்து இருப்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம்।

பிறகு நான் நடக்கிறேன்; நம் நால்வரிடையே
இடைவெளி உள்ளது। போக வேண்டிய இடத்துக்கு போகிறோம்.

நான் கனவில் இதையெல்லாம் கண்டேனா, இந்த பேய்க் காட்சியை,
ஆந்தை சிமிட்டிய, கழுதை பேசிய
நூறு ஏக்கர் காட்டை?
படுக்கையில் நான் வசதியாக சுத்தமாக
கிடக்க, கைகள் கோர்த்து நாம் நிலப்பரப்பின் மீதாக மிதக்கிறோமா?

எனக்கு முன்னதாக அப்பா நகர்கிறார், ஒரு அந்நிய ஏறத்தாழ அருகின இனத்தைப் போன்று; பேரச்சத்தில் வயலுக்கு குறுக்காக
எனதான முழுஅழிவை நோக்கி அவரைத் தொடர்கிறேன்।

வெடித்த நிலப்பகுதி மேலாக மிதக்கின்றன எங்கும்
ஆவிகள். மழைப்பருவ குளிர்மை எங்களையும்
அவற்றையும் வேறுபடுத்தவில்லை। அப்பா சுற்றிலும் நோக்குகிறார்;

புன்னகைக்கிறார் பிறகு திரும்புகிறார்। இந்த இடத்தில்
எங்களுக்கு எந்த வேலையும் இல்லை, ஓசையின்றி, தொடர்ந்து நகர்வதன்றி।

வெற்றுப் பக்கம் ஒன்றை தமக்குப் பின் விட்டுப் போகும்
தொலைந்த உருவங்கள் மற்றும் கறுத்து உறைந்த நிலம்।

அவை குறுக்கே கடக்கின்றன ஒரு மேடையை கடப்பது போல்.

மழைப் பிரிய‌ம் - லாவண்யா சுந்த‌ர‌ராஜ‌ன்

மழைப் பிரிய‌ம்
=============

புகைப்ப‌ட‌ வைப‌வ‌ல‌ட்சுமி
கையுதிர்த்த‌ பொற்காசுக‌ள்
அவ‌ள் கால‌டியில் புதிதாக‌
ம‌ல‌ர்ந்திருந்த‌ ரோஜா பூவின்
ம‌க‌ர‌ந்த‌ துக‌ள்களாக‌
ஒளிர்ந்திருந்த‌ன‌
சாலையோர‌ம் ப‌ச்சையாய்
வசீக‌ர‌ புத‌ர் ஒன்றில்
அதிய‌மாய் ஆங்காங்கே
இள‌ம்ப‌ச்சை பூக்க‌ள்
காற்றிசைத்தால்
சிற‌க‌சைத்து கொஞ்ச‌ம் ப‌ற‌ந்து
மீண்டும் அதே இட‌த்தில் பூத்த‌ன‌
ப‌ட்டாம் பூச்சிக‌ளாய்
நில‌வு ம‌றைத்த‌
கோபுர‌ வெளிச்ச‌ங்க‌ளாக‌
புதிர் கோப‌ங்க‌ள்
பிரிய‌ங்க‌ளை ம‌றைந்து
காட்டும் மாய‌ உல‌கில்
காட்சிப் பிழையாக‌
என் ம‌ழைப்பிரிய‌ம்
ந‌னைக்க‌விய‌லாத‌ தூர‌த்தில்
ந‌தியோர‌‌ ம‌ண‌லாக‌
உன் பிரிய‌ம்
வ‌ற‌ண்டு போயிருக்க‌ கூடும்

எப்போதும் முந்துவது… - செல்வராஜ் ஜெகதீசன்


வழக்கமான தன் விளையாடுமிடத்தில்

முதல் வண்டியில் என்றும் முந்தி ஏறும் மகன்

இடைப்பட்ட ஒன்றில்

இன்றைக்கு அமர்ந்தது

முன்னே இருப்பவனை முழுதாய் பார்க்க என்றான்

எப்போதும் முந்துவது என்பதை விடுத்து

மற்றவரைக் காண்பதென்பதில்

என் வரைக்கும்

ஏக .


Saturday, April 17, 2010

குஜராத் 2002 வழக்கு- மோடி இழக்க இருப்பது மயிரா தலையா- ராஜாஜி.




பூகோள ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் நெருக்கமான ஈழத்தமிழர் மீதான இன அழிப்பையே மறந்து விட்ட தமிழ்ச் சமூகத்துடன் 2002 ஆம் வருடம் குஜராத்தில் நடந்த இஸ்லாமியர் மீதான படுகொலைகள் குறித்து பேச இயலுமா என்று தெரியவில்லை. மக்களின் இந்தப் பொது மறதி போக, மோடியின் தொடர் தேர்தல் வெற்றிகள் மோடியை அம்பலப்படுத்தி பேசுவோரிடம் ஒரு மன ரீதியான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் படுகொலைக்குப் பிறகான இந்த எட்டு வருட கால வெளியில் மோடியை வேறொரு பரிமாணத்தில் மக்களிடம் கொண்டு செல்ல சில சக்திகள் தீவிரமாக முயன்று வந்துள்ளன. மோடியை வளர்ச்சியின், முன்னேற்றத்தின் உருவகமாகச் சித்தரிக்கும் முயற்சிகள் நிறைவேறின.பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைகாடான குஜராத், கார்பரேட் கம்பெனிகளின் சொர்க்கமாக் கொண்டாடப்படுகிறது. இப்படி தனது எதிர்ப்பாளர்களை வாயடைக்க வைத்த மோடிக்கு குஜராத் 2002 படுகொலை வழக்கு பெரும் சவாலாக இருந்தது, குஜராத் படுகொலை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு , மோடி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியவுடன் ஊடகங்கள் இச்செய்திக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளித்தன. Times Now, NDTV போன்ற ஆளும் வர்க்க விசுவாச ஊடகங்கள் கூட இந்த விவகாரத்தில் ஈடுபாடுகாட்டின.
இந்த சம்மன் மீதான மோடி தரப்பு பதற்றத்தை சற்று எதார்த்த நிலைமைகளுடன் உரசிப் பார்ப்பது அவசியம். திருட்டு , வழிப்பறி போன்றவற்றில் சந்தேக நோக்கோடு அழைத்து செல்லப்படும் அடித்தட்டு வர்க்க இளைஞர்கள் பெரும்பாலும் வீடு திரும்பவதில்லை.. அவர்களின் உடல்கள் பிற்பாடு அரசு மருத்துவமனைகளின் வாயிலாக உறவினர்களிடம் வழஙப்படுகிறது. 2000 முஸ்லிம் மக்களின் படுகொலையோடு தொடர்பு படுத்தப்படும் மோடி அடிப்படை அறத்தின் படி குற்றவாளி. ஆனால் அவர் ஆஜராக ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டது. சட்டத்தின் ஓட்டைகளைக் கண்டுபிடிக்க இந்த அவகாசம் மிகப் பெரியது.எல்லோரும் மோடி ஆஜராக மாட்டார் என்று நினைத்திருந்த நேரத்தில் மோடி வேறு மாதிரி முடிவெடுத்தார். தான் ஒன்றும் சட்டத்தை மதிக்காமல் இல்லை என்று காட்ட ஒரு சந்தர்ப்பமாக மோடிக்கு இது அமைந்தது. மோடியின் இந்தப் போலிப் பணிவை பெரிய அளவிற்கு தம்பட்டம் அடித்தது பா।ஜ.க தரப்பு.

(டீஸ்டா சேதல்வாத்)
எனினும் 9 மணி நேரம் மோடி விசாரிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததே என்று கருதுகிறார் , மோடி மீதான வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றக் காரணமாயிருந்த ‘குடிமக்களுக்கான உரிமைகள்’ அமைப்பைச் சேர்ந்த டீஸ்தா சேதல்வாத் அவ்ர்கள்। சாகச ரசனைக்காக மலிவான எதிர்மறைப் பண்புகளை கதாநாயகனுக்கு அளிக்கும் சினிமா இயக்குநர்களைப் போல அடிப்படை அறத்தின்படி குற்றவாளியான மோடி குறித்து கிளம்பிய சுவாரஸ்யமான தினசரி ஊடகச் செய்திகள் அவருக்கு ஹீரோ இமேஜை அளித்தன. சோர்வும் அலுப்பும் தரக்கூடியதான இந்த நீண்ட மாரத்தான் வழக்கை அச்சுறுத்தல் , அவமானங்களுக்கு அஞ்சாமல் இந்தளவுக்கு நகர்த்திக் கொண்டு வந்த பத்திரிக்கையாளரும் மனித உரிமைப் போராளியான டீஸ்தா சேதல்வாத்தின் பெயர் இந்த ஊடகங்களில் லேசாக முனுமுனுக்கப்பட்டது, அவ்வளவுதான்.உண்மையில் இந்த விவகாரத்தில் மோடியின் மீதான ஊடகங்களின் மிகை வெளிச்சத்தின்முன் சேதல்வாத்தின் செயல்பாடு அமிழ்ந்துபோனது.
ஆர்.ஸ்.ஸ். தனது சோதனைச் சாலைகளாக தேர்ந்துகொண்ட குஜராத் ம்ற்றும் மராட்டியம் போன்ற மாநிலங்களில் அவர்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதான காரிமல்ல. பெரியாரின் பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் ஆர்.ஸ்.ஸ் ஐ எதிர்க்க ஒருவர் பயன்படுத்தும் சொல்லை குஜராத்திலோ மும்பையிலோ நினைத்துப் பார்க்க முடியாது. அவர்களுடைய சமூக உளவியலிலேயெ வலதுசாரித் தன்மை ஊறிப்போயுள்ளது. .ஃபாஸிச உளவியலை மிகச் சாதரணமாகத் தமது சமூகப் பார்வையில் கொண்ட மக்கள், வன்முறைக்குப் பயன்படுத்த தயாராக வைக்கப்பட்டிருக்கும் உதிரி வர்க்கம், மோடியின் மூர்க்கத்திற்கு முன்னர் அடிபணிந்த ’நியாயவான்கள்’ ரத்தன் டாடா, அமிதா பச்சன் போன்ற கனவான்களின் ஆதரவு என இந்தப் பட்டியல் மலைப்பைத் தரும். இதற்கு மத்தியில் கோலியாத்தை வீழ்த்திய தாவீதைப் போல ஒன்பது மணி நேர விசாரனைக்கு நடுவில் மோடியை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளிடம் சிறுநீர் கழிக்க அனுமதி வாங்க வைத்த டீஸ்த்தா சேதல்வாத் ஒரு நிஜ நாயகி.
26/11 என்று நாமகரணம் சூட்டப்பட்டுள்ள அஜ்மல் கசாப் மீதான விசாரனை முடிவு பெற்று தீர்ப்பு விரைவில் வெளிவர இருக்கிறது। மரண தண்டனை என்பது கிட்டத்தட்ட அவருக்கு உறுதியாகியுள்ளது। 60 பேரை கொலை செய்த குற்றத்தில் பங்குபெற்ற கசாபிற்கு மரண தண்டனை எனும்போது 2000 முஸ்லீம் மக்களை கொடூரமானமுறையில் வெட்டியும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியும் கொலை செய்த மனித குல விரோதிகள் தண்டிக்கப்படுவதில் ஏன் தாமதம் என்று அறவியல் சார்ந்து எழும் கேள்விக்கு இந்திய குற்றவியல் சட்டம் பதில் வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. கசாப்பிடம் கையாளப்பட்ட நார்க்கோ அனாலிஸிஸ் மற்றும் வேறு பல கொடிய விசாரனை முறைகளில் மோடி விசாரிகப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

ஆர்.ஸ்.ஸ் பின்னிருந்து இயக்கும் பல்வேறு வன்முறைகளில் தண்டிக்கப்பட்டவர் என்று எவருமில்லை. பாபர் மசூதி இடிப்பு வழக்கு இன்னும் ஆரம்ப நிலையிலேயே நொண்டிக்கொண்டிருக்கிறது. 93- மும்பை வன்முறை தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் இன் வன்செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த சிறீ கிருஷ்னா கமிஷன் அறிக்கையோ, ஆர்.ஸ்.ஸ் இன் குண்டு வெடிப்பு பிரிவான ‘அபினவ் பாரத்’ , அமைப்பை விசாரித்து வந்த ஹேமந்த் கர்க்க்கரேவின் கொலைக்கு பின்னர் மண்ணிலே புதைக்கப்பட்டுள்ளது. பிரவீன் தொகாடியா, பிரமோத் முதாலிக் போன்ற காவி உடை தரித்த கிரிமினல்கள், செல்லுமிடங்களில் எல்லாம் வன்முறைத் தீயை பற்ற வைக்கின்றனர்.ஒரிசா கிறிஸ்த்தவ பழ்ங்குடிகள் இன்னமும் தமது சொந்த இருப்பிடஙளுக்குத் திரும்ப முடியவில்லை. கர்னாடகத்திலும் சிறுபான்மைனருக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. கிறித்தவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடந்தேறுகின்றன.. குடிமைச் சமூகம், பத்திரிக்கைகள், அரசு, போலீசு , நீதித்துறை ஆகியவற்றை சாட்சியாக வைத்தே இக்குற்றங்கள் அனைத்தும் நடந்துள்ளன. இக்குற்றஙகள் யாவும் எல்லோரும் அறிய பொதுவெளியில் நிகழ்த்தப்பட்டவையே.

இந்த குறிப்பிட்ட வழக்கும் பெரிய நம்பிக்கையைத் தரவில்லை. முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜாஃப்ரியின் கொலை வழக்கில் அரசின் மெத்தனப் போக்கு கவனிக்கத்தக்கது. மோடி மீது இன்னமும் ஒரு f.i.r. கூட பதிவு செய்யப்படவைல்லை. சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைமை அதிகாரி ஆர்.கே.ராகவன் கூற்றுப் படியே கூட, எதிர்காலத்தில் f.i.r. பதிவு செய்யும் அதிகாரம் சி.பி.கு வுக்கு இருக்கிறதா என்பதில் தெளிவில்லை. இந்த வழக்கு உட்பட குஜராத் படுகொலை வழக்குகள், அரசின் மெத்தனம் என்ற திசையில் செல்லுமானால் அதிக பட்சமாக மோடிக்கு சி.பி.கு. வின் மோதிர விரல்களால் குட்டு மட்டுமே கிடைக்கும். அது டான்ஸி நில மோசடி வழக்கில் ஜெயலலிதாவிடம் மனசாட்சி படி நடந்திருக்கலாம் என ஆலோசனை வழங்கிய நீதிமன்ற ஆணையின் வலிமையைத்தான் ஒத்திருக்கும். சாக்கியா ஜாஃப்ரி போன்று உறவுகளை இழந்த எண்ணற்றவர்களின் பிரார்த்தனை, டீஸ்த்தா சேதல்வாத் போன்ற மனித உரிமை செயல்பாட்டாளர்களின் விடாமுயற்சி, நாடெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் ஏக்கப்பெருமூச்சு , கவித்துவ நீதியின் மீது இயல்பான நாட்டம் கொண்ட எளிய மக்கள், என்று அனைவரின் குவிமையமாக இருக்கும் குஜராத் படுகொலை வழக்குகள் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கு ஒரு அமிலச் சோதனையாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

மீன் மொழியும் நில‌வும் - லாவ‌ண்யா சுந்த‌ர‌ராஜ‌ன்


மீன் மொழியும் நில‌வும்
======================

அன்று ஒரு நாள்
நில‌வை ம‌ட்டும்
சாட்சியாக்கி
நீர்நிலையொன்றில்
மீனாகி நீந்தி இருந்தோம்
நெடும் நேர‌ம்
நெடுந்தொலைவு
விடிய‌ல் வ‌ந்த‌தும்
ப‌ற‌வையாகி ப‌ற‌ந்து போனாய்
உன‌த‌ருமை கூடு நோக்கி
நீ கைம‌ற‌தியாய்
விட்டு சென்ற‌
சில‌ சிற‌குக‌ளை
வெட்டி எடுக்க‌ இய‌லாத‌
செதில் நினைவுக‌ளை
வ‌ன‌மெங்கும் நிறைந்திருந்தேன்
வாசனை திர‌விய‌ங்க‌ள் பூசி
ஒற்றை நில‌வென்ன‌ செய்யும்
மீன் மொழி
புரிவ‌தில்லை அத‌ற்கு
புரிந்திருந்தால் ஒருவேளை
சிரிக்காம‌ல் புல‌ர்ந்திருக்குமது

Tuesday, April 13, 2010

மூன்று பேர் புலியைப் பார்க்க போகிறார்கள் - மாதவி



மூன்று பேர் புலியைப் பார்க்க போகிறார்கள்

மூன்று பேருமே நிஜப் புலி பார்த்திராதவர்கள்

மூன்று பேருமே புலியின் கோடுகள் குறித்த விசித்திர கற்பனைகளும் தகவல் அறிவும் கொண்டவர்கள்

மூன்று பேருமே ... (ஒன்றும் இல்லை)

மூன்று பேரில் ஒருவன் கோட்டோவியங்களில் பழகியே புலியுடன் சினேகமாவன்

இரண்டாமவன் கார்டூன்களிலும் ஊர்வலப் பதாகைகளிலும் புலியுடன் பரிச்சயமானவன்

மூன்றாமவன் குறைந்து வரும் புலி எண்ணிக்கை குறித்த தீவிர அக்கறை கொண்டவன்

முதலாமவன் புலியைப் போன்றே நடக்க, ஓட, பாய, பதுங்கத் தெரிந்தவன்

இரண்டாமவன் புலியைப் போன்றே கர்ஜிக்கவும், புலியைப் போலல்லாது பேசவும் தெரிந்தவன்

மூன்றாமவன் புலிகளின் அங்கீகாரமற்ற தகவல்களஞ்சியம், கூட்டியும் குறைத்தும் பலவாறாக புலி எண்ணிக்கையே வெளியிடுவதே புலி இனத்தை காப்பாற்ற நல்ல வழி என்று நம்புபவன்

முதலாதவன் ...இரண்டாதவன் ...மூன்றாதவன் ...குறித்து மேலும் எந்த தகவலும் இல்லை

அவர்கள் அசல் புலியை பார்க்க போனார்கள் என்பதைத் தவிர

மிருகக் காட்சி சாலையிலிருந்து திரும்பின

முதல் மற்றும் இரண்டாமவனுக்கு பின்னால் குதத்தில் புலி வால் ஆடியது

புலியை மிக நெருங்கி பேசியதால் அது பரிசளித்தது என்று பேசிக் கொண்டார்கள்

மூன்றாமவன் திரும்பவே இல்லை

அவனை யாரும் பிறகு பார்க்க இல்லை

கண்காணா இடத்தில் இருந்து இதை அவன் எழுதிக் கொண்டிருப்பதாக

கடைசியாக வந்த தகவல் தெரிவிக்கிறது

கூண்டுக்குள் இருந்தது நிஜப்புலியே அல்ல புலி எண்ணிக்கையில் இதனால் ஒன்று குறைந்து விட்டது

என்பதை அவன் கவிதையின் சேதியாகவும் உத்தேசிக்கிறான்

வால் முளைத்தவர்களை எந்த எண்ணிக்கையில் சேர்ப்பது என்ற குழப்பம் காரணமாய் அவன் தன் கவிதையை முடிக்காமலே வைத்திருக்கிறான்

ஆனாலும் ஒன்று குறைந்தால் ஒன்று கூடும் என்ற தன் சூத்திரம் நிரூபணமானதில் அவனுக்கு மகிழ்ச்சியே

Sunday, April 11, 2010

ஜராசந்தன்: ஒரு பின்-நவீனத்துவ கலகவாதி - மண்ணுண்ணி




ஜராசந்தன் யார் என்று எனது முந்தைய கட்டுரையின் வாசகரான பாஸ்கி கேட்டிருக்கிறார். அதனால் இங்கு ஒரு சிறு விளக்கம்.
ஜராசந்தன் ஒரு மகாபாரத பாத்திரம்। மகத நாட்டு மன்னன். அதை விட முக்கியமாய் ஒரு பின்-நவீனத்துவவாதி. வைணவக் கடவுளான கண்ணனுக்கு எதிராக கலகம் புரிந்தவன். உடலும் மனமும் துண்டுபட்டு இணையக்கூடிய அவன் ஒன்று பலவாறாக இருக்கக் கூடிய இன்றைய தலைமுறை தனிமனிதனின் புராணிக அச்சு.



ஜராசந்தன் பிறக்கும் போதே இரு துண்டுகளாக தோன்றுகிறான். அவனது தந்தையான மன்னர் பிருக்ரதன் கலவரமாகி பிண்டங்களை ஊருக்கு வெளியே வீசி அப்புறப்படுத்துமாறு ஆணையிடுகிறான். அங்கு ஜரா என்ற அரக்கி அவனை இணைத்து முழுமையான குழந்தையாக்குகிறாள். மன்னனிடம் மீண்டும் சேர்ப்பிக்கிறாள். இப்படி அரக்கியால் மறு-உயிர்த்த அவன் ஜராசந்தன் என்று அறியப்படுகிறான். இங்கு அரக்கி, அரக்கர்கள் ஆளும்வர்க்க ஆரியர்களால் ஒடுக்கப்பட்டு வனங்களில் வாழ நிர்பந்திக்கப்பட்ட இந்தியாவின் பழங்குடியினர் அல்லது ஆதிமக்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஜராசந்தனுக்கு உயிரளித்தது அரக்கி என்பது முக்கியமானது. ஏனென்றால் மன்னர் பதவியில் இருந்தாலும் விளிம்புநிலை அரசியலை வெளிப்படுத்தியவன் அவன். மற்றொரு அரக்க மன்னனான கம்சனுக்கு மாமன் முறை. பதினெட்டு முறை மதுரா நகரை முற்றுகையிட்டு வைதிக பாத்திரமான கண்ணனை ஊரைவிட்டே விரட்டியவன்.
ஜராசந்தனை அவ்வளவு எளிதில் யாராலும் தோற்கடிக்க முடியாது। எத்தனை சேதமுற்றாலும், வெட்டிப் பிளக்கப்பட்டாலும் அவன் உடல் மறுபடி ஒன்றாக பொருந்திக் கொள்ளும். மகாபாரதக் கதையில் ஜராசந்தன் கண்ணனை சற்றும் அஞ்சாமல் தொடர்ச்சியாக கெட்ட வார்த்தைகளால் வையும் இடம் ஒன்று வருகிறது. பிறகு வீமனுக்கும் ஜராசந்தனுக்கும் 27 நாட்கள் சண்டை நடக்கிறது. வீமன் சோர்ந்து போன தருணத்தில் கண்ணன் ஒரு தந்திரம் சொல்லித் தருகிறான். ஜராசந்தனை கிழித்து இருவேறு திசைகளில் அவன் மீண்டு பொருந்த முடியாவண்ணம் போட வேண்டும் என்பதே அது. இந்திய வரலாற்றில் மீண்டும் மீண்டும் நடந்து வருவது போல் அந்தண தந்திரத்தால் பிற இனத்தவர் தோற்கடிக்கப்படுகிறார்கள். இங்கு ஜராசந்தனை தோற்கடிக்க கண்ணன், வீமன் மற்றும் அருச்சுனன் அந்தண வேடம் பூண்டு வருகிறார்கள் என்ற குறிப்பு முக்கியமானது. வாமனனை தோற்கடிக்கவும் கண்ணன் அந்தண வேடமே அணிகிறான்.



இன்றைய யுகத்தில் நமது ஆளுமையும் அரசியலும் மீடியாவாலும், உலகமயமாக்கலாலும் பலவாறாக சிதறிக் கிடக்கிறது. நமக்கென்று ஒரு கருத்தை, நிலைப்பாட்டை உருவாக்குவதே பெரும் சவாலாக உள்ளது. உண்மை பலவிதமான பொய்களாலும், பொய்யென்று நினைப்பது சின்னஞ்சிறு உண்மைகளாலும் உருவாக்கப் படுகிறது. இங்கொன்றும் அங்கொன்றுமாக வாழவதில் சிந்திப்பதில், நேர்முரணான நிலைப்பாடுகளை எடுப்பதில் நமக்கு பல சமயங்களில் தயக்கம் இருப்பதில்லை. உதாரணமாக ஒருவர் கறுப்பு சட்டை அணிந்தபடியே காவி அரசியல் செய்யலாம். விளிம்பு நிலைவாதம் பேசுகிறவர்களிடமும் நுட்பமாக நிலப்பிரபுத்துவ சனாதன அரசியல் இயங்கலாம். மேலே இருப்பவரின் மிதியை வாங்கி நொந்தபடியே நமக்கு கீழே உள்ளவர் தலைமீது மேலும் இரண்டு மிதி போடுகிறோம். ஒரு பக்கம் அதிகார அரசியலை கடுமையாக சாடும் ஒரு பத்திரிகை மறுபக்கத்திலேயே அதிகார மையத்துக்கு வெளிப்படையாக கூழக்கும்பிடு போடலாம். வாசகர்கள் இந்த முரணை பொருட்படுத்தாமலே படிக்கலாம். எழுத்தாளனின் ஒவ்வொரு வரியும் முரண்படும் கருத்துக்களால் பின்னப்படலாம். இதனாலே இன்றைய மனிதனின் மனம் ஒரு சிதறுதேங்காய் என்றேன். ஜராசந்தன் உடலால் ஒரு சிதறுதேங்காயாக இருக்கிறான். இந்த பிளவுதான் அவன் ஆளுமையும். ஒழுங்கையும், நெறியையும் விழையும் பெருங்கதையாடல் பாத்திரமான கண்ணனுக்கு ஜராசந்தன் விரோதியானதில் எந்த வியப்புமில்லை. ஜராசந்தன் எந்த ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள்ளும் மாட்டாமல் வழுவிக் கொண்டே போகிறான். ஏற்கனவே குப்பையான ஒன்றை மேலும் எப்படி குப்பையாக்க முடியும்? கலைந்த கேசம் எவ்வளவு கலைந்தாலும் கலைந்த கேசம் தானே. ஜராசந்தனின் சிதறல் இருப்பை மேலும் சிதறடிக்க முடியாது. இதனாலே அவனை கொல்ல முடிவதில்லை. இதனாலே ஜராசந்தனை ஒரு பின்-நவீனத்துவ கலகக்காரன் என்று கூறினேன். ஒரு பின் நவீனத்துவ ஆளுமையின் அழிவு என்பது அதன் பிளவுகளுக்குள் இயங்கும் குறைந்தபட்ச ஒருங்கிணைவை இல்லாமல் ஆக்குவது. இது முழுபைத்திய நிலை என்று இன்றைய மொழியில் சொல்லலாம். ஜராசந்தனை கண்ணன் இப்படித்தான் அழிக்கிறான். அவன் மீண்டும் இணைய முடியாதபடி இருகூறுகளையும் திசைமாற்றிப் போடுகிறான்.

Friday, April 9, 2010

திமுக ஆட்சி யாரை ஊக்குவிக்கிறது? (அ) ரவுடிகள், (ஆ) போலீஸ் - மண்ணுண்ணி






ஜெயலலிதாவுக்கு தி.மு.கவை பிடிக்காததற்கான மிக சின்ன காரணங்களில் ஒன்று மு.க ஆட்சியில் ரவுடிகள் கட்டவிழ்த்து விடப்பட்டு ”சட்டம்-ஒழுங்கு சீர் குலைவது. அவர் தூங்கி பெட்காபி குடித்தபடி எழுந்துததுமே “கருணாநிதியின் மைனாரிட்டி குடும்ப ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ...” என்று கூறி தொடங்குவதாக நம்பகமான இடங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால் சட்டம் ஒழுங்கை கராறாக கையில் எடுத்தால் புல்லட்புரூப் அம்மாவை பாசிஸ்டு என்கிறார்கள்। வரும் உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிடப் போகும் கலைஞர் அகராதியில் பாசிஸம் என்ற வார்த்தையை அரசியல் பிரிவில் சேர்க்கப்படும் அளவிற்கு ஜெவை குறிப்பிடும் போதெல்லாம் அந்த வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டு விட்டது। வேலை செய்வதே பிடிக்காத என் நண்பன் ஒருவன் இந்த இரு தீவிர நிலைப்பாடுகளுக்கு ஒரு மாற்று சொல்கிறான். அவனுக்கு மறந்து விட்ட ஒரு குறளில் திருவள்ளுவர் கூறியுள்ள படி ஒரு ஆட்சியாளன் இரண்டு எதிரிடைகளுக்கும் நடுவே ஒரு கோடுகிழித்து அதில் பயணிக்க வேண்டுமாம். அது சாத்தியமே இல்லை என்று நான் சொன்னதற்கு அவன் அவனது பெண் மேலாளர் சொன்ன ஒரு கதையை சொன்னான்.
இந்த மேலாளர் ஜெவை போல ஒரு அம்மையார்। அதாவது அடுத்தவர்கள் எப்போதும் முதுகு வளைந்தபடியே நடக்க வேண்டும் என்று விரும்புபவர்। கதை அவர் ஐம்பதுகளில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி தலைமை ஆசிரியரால் சட்டம் ஒழுங்கு எப்படி பேணப்பட்டது என்பதைப் பற்றியது. அதில் குறிப்பிடத்தக்கது நோட் புத்தகங்களுக்கு பழுப்பு வண்ண அட்டை அணிவிக்காத மாணவர்களுக்கு தலைமையாசிரியர் தரும் தண்டனை. சட்டையை கழற்றி வாசலில் முட்டி போட்டு நிற்க வைப்பாராம். (அது பெண்களுக்கு மட்டுமேயான பள்ளியா என்ற ஐயம் உங்களைப் போன்று எனக்கும் எழுந்தது). ஆனால் தண்டனைக்காலம் முடிந்ததும் ஆசிரியர்கள் ஓடி வந்து குற்றவாளியை அள்ளி எடுத்து “செல்லம், புஜ்ஜு, ஜூஜூ” என்றெல்லாம் கொஞ்சி உடலின் பலபாகங்களை கிள்ளி சீராட்டுவார்களாம். இதன் விளைவு? உங்களுக்கு தண்டனை மீது கோபமே வராதாம்!

ஜெ சொல்வதில் அவரது கட்சிக்காரர்களுக்கே நம்பிக்கை இல்லை போல। அவர்கள் முழுக்க மாறுபடுகிறார்கள். சட்டசபையில் சமீபத்தில் நடந்த விவாதத்தில் கலையரசன் தி.மு.க ஆட்சியில் போலிசாரிடையே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறியுள்ளார். குறிப்பாக நடைபாதை கடைக்காரர்களிடம் கூட லஞ்சம் வாங்குவதாக அவர் கூறியுள்ளதை முக்கியமாக கருதுகிறேன். அடிக்கடி போலி டி.வி.டி தயாரித்து, விற்பனை செய்ததாக சிலரை கைது செய்து பத்திரிகைகளில் படம் வெளியிடுவார்கள். ஆனாலும் பட்டப்பகலில் திருட்டு டி.வி.டிக்கள் வெளிப்படையாக விற்கப்படுகின்றன. இவை வெறுமனே மாமூல் கைதுகள் தாம். கிண்டி பகுதியில் ஒரு தொப்பை போலீஸ் மாமா பைக்கில் இருந்தபடியே திருட்டு டி.வி.டிக்காரரிடம் லஞ்சம் கேட்டுப் பெற்று சட்டைப் பையில் சொருகுவதை கண்டேன். எனக்கு கரப்பான்பூச்சியையும் போலீசையும் கண்டால் சின்ன வயசில் இருந்தே பயம் என்பதால் இந்த காட்சியை உங்களுக்காக நுண்பேசியில் படம் பிடிக்கும் முயற்சியை கைவிட்டேன். இங்கு ஒன்றை ctrl+U போட்டு சொல்ல வேண்டும். மாமூல் கொடுக்கும் கடைக்காரர் போலீசை சிறிதும் சட்டை செய்யவில்லை. நாய்க்கு புரை வாங்கிப் போடும் ஒருவித அலட்சிய பாவனை. அடுத்து இந்த கடைக்காரரிடம் விசாரித்ததற்கு படிநிலை பொறுத்து லஞ்ச தொகை மாறுபடும் என்றார். அதாவது நூறில் இருந்து ரெண்டாயிரம் ரூபாய் வரை அடிக்கடி வாங்கி செல்வார்களாம். காவல்துறை இதற்கெல்லாம் ஒரு நிலையான கணக்கு வைத்துக் கொண்டு கடை, இடை, தலை ஊழியர்களை எல்லாம் கண்டமேனிக்கு தோன்றும் போதெல்லாம் அனுப்பி கை நீட்டும் அவலத்தை தவிர்க்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். அடுத்து தர்பூசணி மற்றும் இளநீர் விற்கும் மற்றொரு சாலையோர கடைக்காரர் தி.மு.க ஆட்சி பற்றி இதே போன்றே அலுத்துக் கொண்டார். “அ.தி.முக ஆட்சியில் போலீஸ்கரங்க லஞ்சம் வாங்கவே பயப்படுவாங்க. இப்போது வெளிப்படையாவே வந்து புடுங்கீட்டு போறாங்க.” மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் போலீசுக்கு தாரை வார்க்க வேண்டி உள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார். “மாமூல் கொடுக்காட்டா கேஸ் போடுவாங்க. இவனுவளுக்கு கொடுக்கிற லஞ்சக் காசை கோர்டில பைனாவே கட்டீரலமுன்னு சில சமயங்களில் தோணும்”.
”காவலர்களை யார் காவல் காப்பது?”
சாகரடீஸ் தனது லட்சிய நாடான utopia-வை விளக்கிக் கொண்டிருக்கும் போது அவரிடம் இந்த கேள்வி கேட்கப்படுகிறது। பின்னர் இதற்கு தீர்வு சொல்லும் சீடர் பிளேட்டோ “அதிகார மோகம் இல்லாதவர்கள் காவலர்களாக வேண்டும்” என்கிறார்। இது சாத்தியமில்லை என்று உணர்ந்து விட்ட பின் இன்று மற்றொரு தீர்வு சொல்லப்படுகிறது: அதிகாரத்தை பிரித்தளிப்பது। எந்த பெரிய குழுவிடமும் அதிகாரம் மொத்தமாக சேர்ந்து விடுவதை தவிர்ப்பது। ஆட்சி அதிகாரம் இப்படி பகிர்ந்தளிக்கப்படுவது ஊழல் மற்றும் பொறுப்பின்மையை குறைக்க உதவலாம்.
எனக்கென்னமோ ஜராசந்தன் கதை தான் நினைவுக்கு வருகிறது.

Tuesday, April 6, 2010

தமிழியலாய்வுகள் - வரலாற்றின் மறைவோட்டங்கள்(1) உ.வே.சா-ஒளியும் நிழலும் -க.ரவிச்சந்திரன்.


பத்தொன்பதாம் நூற்றாண்டு, அறிவுத் துறைகளின் ஒருங்கிணைவுக் காலகட்டம்।தொழிற்புரட்சியின் தொடர் விளைவாய் பிரித்தானிய , போர்த்துகீசிய வரவுகள் இந்தியாவிற்குள் காலனிய வரலாற்றைத் தொடங்கி வைக்கின்றன।அச்சு ஊடகம் தமிழை அதன் சகல பரிமாணங்களிலும் நவீன படுத்திற்று।தொடர் வண்டி என்ற நவீன போக்குவரத்து ஒருங்கிணைப்புடன் உ।வே।சாவின் பதிப்பும் தேடலும் தொடங்குகிறது. குடந்தையில் ஆசிரியர் பணியும் சென்னையில் சீவக சிந்தாமணி பதிப்பும் என்பது ரயில்வண்டியின் வரவு இல்லையேல் சாத்தியமன்று. 1909 இல்தான் உ.வே.சா சென்னை மாநிலக் கல்லூரிக்கு மாற்றலாகி வருகிறார்.

குடந்தையில் உ.வே.சா தங்கியிருந்தபோதே சி.வை.தாமோதரம் பிள்ளை அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று 1887இல் புதுக்கோட்டை சமஸ்த்தான நீதிபதிகளில் ஒருவராக இருந்து, பின்னர் 1885 இல், குடந்தையில் கருப்பூரில் வாழத் தொடங்கினார்.இங்குதான் சி.வை.தா வும் உ.வே.சாவும் கலந்து பழகினர். சீவக சிந்தாமணி பதிப்பு குறித்த மனஸ்த்தாபமும் சிறு பிரிவும் இருவருக்கும் இவ்விடத்தே உண்டானதை உ.வே.சா. வின் ’என் சரித்திரம்’ பகிர்ந்து கொள்ளும் செய்தி. சி.வை .தா. தம்மிடமிருந்து வஞ்சகமாக, சிந்தாமணி ஏடுகளை வாங்கிச் சென்றதாக உ.வே.சா குறிப்பிடுகிறார்.அனால் இந்நிகழ்வு ‘என் சரித்திரத்தில்’ மட்டும்தான், அதாவது சி,வை.தா வுக்கு எதிரான பதிவாக இடம்பெறுகிறது.மற்றைய, அவரின் உரைநடை நூல்கள் மற்றும் முன்னுரைகள் ஆகியவற்றில் சி.வை.தா வுக்கு எதிரான பதிவைக் காண்பது அரிது. இதனால் என் சரித்திரத்தில் சில பகுதிகள் உ.வே.சா வின் ஆத்ம சீடரான கி.வ.ஜா எழுதியிருக்கலாமோ என்ற ஐயத்தை கைலாசபதி, சிவத்தம்பி , ராஜ்கௌதமன் ஆகியோர் எழுப்புகின்றனர்.வையாபுரிப் பிள்ளையும் இதனை முன்பு குறிப்பிட்டுள்ளார்.இந்த ஐயத்தை என் சரித்திரத்தின் பிற்பகுதியிலுள்ள நடை வேறுபாடுகள் வலுப்படுத்துகின்றன.. ( உ.வே.சா )
எனினும் இதனை முற்றான முடிவாக எடுத்துக் கொள்வதற்கில்லை।பல பெரும் அளுமைகள் மீது இவ்வாறான சாடல்கள் ஐயங்கள் உண்டு. ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கையிலேயே அவரது மனைவி மிலோவா ஐன்ஸ்டைனின் பங்களிப்பு மறைக்கப்பட்டது என்ற அளவிற்கு கூட விமர்சனங்கள் எழுந்துள்ளன.ஆனால் இந்த ஐயம் எளிதில் புறக்கணிக்கத்தக்கதும் அல்ல.



உ।வே।சா வுக்கு ஏடுகளைப் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை இருந்ததில்லை என்பதை வையாபுரிப் பிள்ளை, உ।வே।சா வின் நினைவு நாள் சொற்பொழிவில் திருவல்லிக்கேணி இலக்கியக் கூட்டத்திலேயே பதிவு செய்துள்ளார்.(தமிழ்ச்சுடர் மணிகள் – 6) உ.வே.சா வின் சீவக சிந்தாமணிப் பதிப்பு நடந்தேறியவுடன் அதிலுள்ள பிழைகளைக் கண்டறிந்த வித்வான்களில் வையாபுரிப் பிள்ளை முதன்மையானவர்.. இவரின் சிந்தாமணிப் பதிப்பு, - சைவ சமாஜப் பதிப்பாக- 1941- இல் வெளியானது.அதில் உ.வே.சா வின் பதிப்பில் காணப்பட்ட பிழைகளைத் தொகுத்து அதன் முன்னுரையில் விரிவாகப் பேசியுள்ளார்.உ.வே.சா வின் சிந்தாமணிப் பதிப்புக்கு எதிராக வெளியான மற்றொரு கண்டன நூல் இலங்கையில் இருந்து வந்தது.
பொன்னம்பல தேசிகர் என்னும் தமிழ்ப் புலவர் வெளியிட்ட ‘ ஸீமத். வே. சாமிநாதைய்யரவர்கள் பதிப்பித்த சீவகசிந்தாமணி உரைப் பிழைகள்’ என்பதே அந்நூலாகும்.1887 இல் முதல் பதிப்பும் 1907 இல் இரண்டாம் பதிப்பும் வெளிவந்தது. முதல் பதிப்பில் அச்சிடப்பட்ட ஐநூறு பிரதிகள் அச்சுக் கூடத்திலேயே வீணாயின என்பது அன்றைய தொழில் நுட்ப பலவீனத்தை குறிக்கிறது.
உ।வே।சா சிந்தாமணிப் பதிப்பை செய்து வருகையில் சமண சமய விளக்கங்கள் வேண்டி சமண நண்பர்களை நாடிச் சென்றார்। அதில் சந்திரநாத செட்டியாரின் உதவியுடன் திண்டிவனம் வீடூர் கிராமத்தில் அப்பசாமி நயினார் என்பவரை அணுகி பல விளக்கங்களைப் பெற்றுள்ளார்। இவர், குடந்தை அரசுக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய, இந்திய அளவில் அறியப்பட்ட புகழ்பூத்த சமண அறிஞர் அ।சக்கரவர்த்தி நயினாரின் தந்தை ஆவார்।
அ.சக்கரவத்தி நயினாரின் நீலகேசி பதிப்பு சமய – திவாகர வாமன முனிவரின் உரையுடன் 1936 இல் வெளியாயிற்று.இதில் சக்கரவத்தி நயினாரின் சமண சமயம் குறித்த முன்னுரை ஆங்கிலத்தில் ஏறத்தாழ 300 பக்கங்களுக்கும் மேலாக விரிந்து செல்கிறது, தமிழ்ச் சமண மரபை சைவ நூல்வழியே அறிந்து வரும் ஒரு தமிழ் மாணவன் இத்தகைய மாற்று மரபை அதன் சொந்த களத்தில் எதிர் நோக்குதல் ஒரு புதிய புரிதலை வழங்கக் கூடியதாகும்.

இத்தகைய சமண நண்பர்களின் வழிகாட்டுதலை உ.வே.சா வுக்கு குடந்தை அரசுக் கல்லூரி சூழல் வழங்கியது. உ.வே.சா , பதிப்பியலில் முன்னோடித் தன்மையும் மாற்று சமயங்கள் மேல் காழ்ப்புணர்வற்ற நோக்கும் கொண்டிருந்த போதிலும் அன்றைய சுதந்திர போராட்டம் முன்னிட்ட தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு எழுச்சிகள் மிகுந்த சமூக அசைவியக்கத்திலிருந்தும் சரித்திரப் போக்கிலிலிருந்தும் உ.வே.சா விலகியே நின்றார்.
(சி.வை,தா)

வ.வு.சி, சிறையில் இருந்தபடியே திருக்குறளுக்கு உரை எழுத முற்பட்ட போது ஏற்பட்ட ஐய்யங்களை தீர்த்துக்கொள்ள உ.வே.சா வுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். உ.வே.சா , அதற்குத் தான் பதிலளித்தால் பிரிட்டிஷ் அரசோடு முரண்பட நேரிடுமோ என்றஞ்சி மாநிலக் கல்லூரியின் ஆங்கிலேய முதல்வரிடம் ஆலோசனைப் பெற்ற செய்தியை உ.வே.சா வின் உரைநடைப் பகுதி ஒன்றிலேயே காணலாம்.. இத்தகைய ஒரு சமூகப் பிரக்ஞையுடந்தான் உ.வே.சா செயல்பட்டுள்ளார்.
19 ஆம் நூற்றாண்டு மடங்களின் கல்விச் சூழல், சைவ மடங்களுக்கு இடையேயான பிணக்குகள், அன்றைய தமிழ் இலக்கிய-அரசியல் போக்குகள் ஆகியவற்றை கூர்ந்து அறிய உ.வே.சா வின் உரை நடை நூல்கள் மிக முதன்மையான தரவுகளாகும். இவற்றுக்குள் ஊடாடும் நுண் அரசியல் தளங்களை அறிய முற்படும் முதற் படியாக இக்கட்டுரை அமைகிறது
கூர்ந்து அவதானித்தால் சபாபதி நாவலரின் ‘திராவிட பிரகாசிகை’ என்ற நூல்தான் தமிழ் இலக்கிய வரலாற்று முன்னோடி நூல் எனலாம். இந்நூல் பற்றி தமிழில் அதிகம் பேசப்படவில்லை. பேரா.சிவத்தம்பி மட்டுமே தனது ‘ தமிழில் இலக்கிய வரலாறு ‘ எனும் நூலில் போகிற போக்கில் சுட்டிச் செல்கிறார். இது குறித்த விவாத்த்திற்கு இனி அடுத்த தொடரில் வருவோம்.

நவீன கல்வி உருவாக்கத்திற்கான பாட நூல்களாக தமிழிலக்கியத்தை அச்சேற்றம் செய்த தமிழறிஞர்கள், அதை எதிர்த்து எழுதிய தியாகராஜ செட்டியார் போன்ற குடந்தைத் தமிழ்ப் பேராசிரியர்கள் , ஆறுமுக நாவலரைத் தொடர்ந்து தமிழ் நூல் பதிப்பில் இயங்கிய சி.வை.தா , சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சார்ந்த மழவை மகாலிங்க ஐயர் போன்றோரின் தொல்காப்பிய பதிப்புகள் , ரா.ராகவையங்கார் தலைமையில் வெளியான ‘ செந்தமிழ்’ இதழில் வந்த ஆராய்ச்சி கட்டுரைகள் - என 19 ஆம் , 20 ஆம் நூற்றாண்டு அறிவுப் புலம் பல்வேறு சுவாரசியங்களை உள்ளடக்கியிருக்கிறது.அது வரலாற்றின் மறைவோட்டங்கள் பலவற்றை நமக்குச் சொல்கிறது.இதனை அடுத்து தொடர்வோம்...
.......தொடரும்

ஹைக்கூ - தேவராஜன்


நெருங்கும் துரித ரயில்
ஊதப்படும் பலூனாய் வீங்கும் சத்தம்
கடந்து செல்கையில்
உடைந்து, மட்டம் வடியும்
அவர் அவர்க்கு
அவர் அவரே ஊசி

தனிமையின் சருகுகள் - அருள்.


அடர்ந்த புங்க மரநிழல்..
சம்மணமிட்டுக் கொண்டிருக்கும் நினைவுகள்..
இலைகள் அசையும் சிறுசிறு கிழிசலில்
சொட்டிக் கொண்டிருந்தது வெளிச்சம்.
சிறிய கால இடைவெளிக்குப் பின் நிகழ்ந்த
சந்திப்பு மானசீகமாய் தொடங்கியது.
எதிர்பார்த்தது போலவே
பாதரசமாய்ச் சிதறும்
சலனமற்ற பேச்சு..
இருப்பினும்
நஞ்சேறிய நினைவுகளோடு
கைகோர்த்தத இந்த பயணம் வினோதம்.
காலம் கறுத்து கட்டுவிரியன் பாம்பாய்
புங்கமர சருகுகளில் சுருண்டு கிடக்கிறது
அனைத்து அறிதல்களோடும் தனிமை.

Monday, April 5, 2010

மதன் கவிதைகள்

ஒட்டாமல் கேட்டல்



கிடைக்காமல் லைனில் கிடைத்த
யூஸரிடம் சற்று தள்ளி
தொலைபேசிக் கொண்டிருக்கிறான்
சக அலுவலன்
விடாமல்
வைப்ரேட்டிக் கொண்டிருக்கும்
அவனது அலைபேசி யதிர்வில்
கேட்டன
நடுவழியலையில் பொறிந்துதிர்ந்த
ஏதோ
யாரோ
வார்த்தைகளின்
சாம்பல் சத்தங்கள்


இடம் பொருள் கேவல்



எப்படியோ கையில் கிடைத்துவிட்ட
பிளேடைக் கீழே வைத்துக்
கிர்ர்றீச்சி விட்டாள்
குழந்தை
பல் கூசிவிட்டதாம்
பில்லிங் கவுண்ட்டரில்
எல்லோர் முன்பும்
அசிங்கமாகத் திட்டினார்
வளர்ந்தவர்
நா கூசவில்லையாம்

நீள் மௌனம்



நான் இங்கே தனியாக இருந்தேன்
அவள் அங்கே தனியாக இருந்தாள்
எங்கள் தனிமைகள்
புணர்ந்து கொண்டிருந்தன

செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்

விமான நிலைய வரவேற்பொன்றில்



பயணக் களைப்பாய்
இருக்கலாம்.

போய்வரும் இடத்தில்
நேர்ந்த உறவைப்
பிரிந்ததால் இருக்கலாம்.

எதிர்கொண்டழைக்க
எவருமற்று காணும்
புது இடம் குறித்த
மிரட்சியாய் இருக்கலாம்.

ஏக்கமும் சோகமும்
கொண்டு எதிர்பட்டவனை
நோக்கி இதழ்க்கோடியில்
தவழ விட்டேன்
புன்னைகையொன்றை.

சற்றே சலனம் காட்டி
பின் சமாளித்து
போய்க்கொண்டிருந்தவன்
நினைத்திருக்கக்கூடும்
ஏதும் என்னைப் பற்றி.

இறுக்கிப் பிடிக்கும்
வாழ்க்கையில்
இன்னொரு முகத்தின்
சோகத்தை இம்மியாவது
இடம்பெயர்க்க
முடிந்ததென்ற
நிம்மதி எனக்கு.



இதையும்



இன்னும் சற்று மேம்பட்டதாக
இன்னும் சிறிது சுரத்துள்ளதாக
இன்னும் கொஞ்சம் உவப்பானதாக
இன்னும் எப்படியெல்லாமோ
இருந்திருக்கலாம் என்கிறீர்கள்.

இந்த ஒரு சிறு வாழ்வில்
இந்தளவாவது இயன்றதே என்கிறேன்.
இதையும் எப்படியாவது புரிந்து கொள்ளுங்கள்
ஏனைய பிற யாவற்றையும் போல.

சா.தேவதாஸின் சார்லஸ் டார்வின்: பரிணாமத்தின் பரிமாணங்கள் – அறிவியல் மற்றும் உலகக் கண்ணோட்டத்துக்கான நூல் - ராஜாஜி




பத்தொன்பதாம் நூற்றாண்டைய ஐரோப்பாவின் இயல்பை இரண்டு விசயங்கள் பாதித்தன எனலாம். ஒன்று காரல் மார்க்சின் கம்யூனிச பூதம்; இன்னொன்று டார்வினின் பரிணாம கோட்பாடு. தவிர்க்க இயலாமல் நமது அறிவியல் பாடப்புத்தகத்தில் வரும் எளிய அறிமுகத்தை தாண்டி டார்வினின் பரிணாம கோட்பாடு ஒரு முக்கிய பொருளாக எங்கும் விவாதிக்கப்படவில்லை. படித்து மறந்து விட கற்பிக்கப்படும் நமது பாடத்திட்டத்தில் காத்திரமான ஒரு அறிவியல் கொள்கை அதன் மதிப்பையும் வீச்சையும் இழந்து நிற்கிறது. தமிழில் டார்வின் பற்றிய முதல் நூல் 1953-இல் தான் வெளிவந்தது. இது ஏறக்குறைய டார்வினின் உயிரினங்களின் தோற்றம் நூல் வெளியாகி நூறு வருடங்கள் கடந்த பிறகு நடந்துள்ளது. இந்த எதார்த்தத்தின் பின்னணியில் சா.தேவதாஸின் சார்லஸ் டார்வின்: பரிணாமத்தின் பரிமாணங்கள் நூல் முக்கிய கவனம் பெறுகிறது. ஆழி பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. முல்லாக்களாலும் பாதிரிகளாலும் இன்று வரையிலும் மூர்க்கத்துடன் எதிர்கொள்ளப்படும் டார்வின் அவர் வாழ்ந்த காலத்தில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற பிரச்சனை சார்ந்த இச்சிறுவிவாதத்தில் கூட ஊடுபடவில்லை என்ற ஆச்சரியமான உன்மையை நூலில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.



ஒரு வேளிப்படையான விவாதத்துக்கு மதவாதிகளின் கூச்சல் பெரும் தடையென அவர் உணர்ந்திருக்கலாம். அடிப்படையில் இத்தகைய கூச்சல் ஒரு விஷச்சுழி. அடுத்தடுத்த ஆய்வு முன்னேற்றத்திற்கு எழ விடாமல் பின்னால் இழுப்பவை. மனித சமூகத்தின் ஆற்றலிலும் அறிவியலிலும் அபார நம்பிக்கை கொண்ட டார்வின் மதவாதிகளை கவனிக்கும் பொறுப்பை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லவும் எண்ணியிருக்கலாம். பரிணாமக் கோட்பாடு என்ற அறிவியல் வளர்ச்சிக்கு டார்வின் மட்டுமே காரணம் எனும் அறியாமையில் மதவாதிகள் டார்வினை குறிவைத்து தாக்குகிறார்கள். டார்வின் மட்டுமல்ல பரிணாமக் கோட்பாடினை வளர்த்தெடுத்தவர்கள் அவர் காலத்தில் வாழ்ந்தவர்களில் நிறைய பேர். சார்லஸ் லயல் மற்றும் ஆல்பிரட் ரக்ஸல் வாலஸ் ஆகியோரின் பங்களிப்பும் குறிப்பிடும்படியானவை என்கிறார் நூலாசிரியர், “ஆரம்பத்தின் தடயங்களோ முடிவுக்கான சாத்தியமோ அற்ற பூமி ... கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமையானது” (பக்.81) என்று 1830-இல் லயல் முன்மொழிந்துள்ளார். இது ஆதியாகம் கணிக்கும் காலத்தின் பழமையை கேள்விக்குள்ளாகுகிறது. டார்வினின் இயற்கை தேர்வு தனிச்சிறப்பான ஒன்று.



சமகாலத்தவரான மார்க்சுடன் டார்வினுக்கு இருந்த உறவு மிக அழகானது என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர். மார்க்ஸ் தனது மூலதனத்தின் முதல் பகுதியை முதலில் டார்வினுக்கு அளிக்கிறார். அதனை டார்வின் உவகையுடன் பெற்றுக் கொள்கிறார். பிறிதொரு சந்தர்பத்தில் இதனை குறிப்பிடும் ஏங்கல்ஸ் மார்க்ஸின் தத்துவமும் டார்வினின் கோட்பாடுகளும் ஒன்று மற்றொன்றை இட்டு நிரப்புவதாக உள்ளது என்று பெருமிதம் கொள்கிறார். கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் நூலில் ஏங்கல்ஸ் டார்வினை மனம் திறந்து பாராட்டியுள்ளதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.



“இயற்கை இயங்கியல் ரீதியில் செயல்படுகிறது; அப்பாலை தத்துவ ரீதியில் அல்ல .. நிரந்தரமாக தொடரும் சுழற்சியின் நித்திய ஒருமையில் அது செல்வதில்லை, மாறாக உண்மையான வரலாற்றியல் பரிணாமம் மூலமாகச் செல்கிறது.இதைப் பொறுத்து, எல்லோருக்கும் முன்பாக டார்வினை நிறுத்த வேண்டும்.. அனைத்து அங்கக உயிர்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதனே கூட லட்சக்கணக்கான ஆண்டுகளின் பரிணாம நிகழ்ச்சிப் போக்கின் விளைவுகளே எனும் தனது ஆதாரத்தால் இயற்கையின் அப்பாலைத் தத்துவார்த்த கருத்தமைவுக்கு பெரும் அடி கொடுத்தார். ” பக். 63)

டார்வின் வரையறுத்த ’தகுதியுள்ளது தங்கி நிற்கும்’ என்ற தாவரங்கள்/ விலங்குகளின் உலகில் காணப்படும் போக்கை சமூக தளத்தில் முதலாளித்துவ சுரண்டலை நியாயப்படுத்தும் நோக்கிற்கு பயன்படுத்துவதை நூலாசிரியர் கடுமையாக எதிர்க்கிறார். சமூக டார்வினியவாதிகள் சிலரின் வியாக்கியானங்கள் இதற்கு உதவும்படி இருப்பதை நூலில் விமர்சிக்கிறார்.

‘பரிணாமத்தின் திசைவழிகள்’ , அழிதல்/உருவாதல்/பயணித்தல்’, ’உயிரினத்தின் உச்சம் மண்புழுதான் மனிதன் அல்ல’, ‘ டார்வினும் மார்க்சும்’ ஆகிய அத்தியாயங்கள் முக்கியமானவை. டார்வினின் இளமைக் காலம், கடிதஙள், தொடர்புகள், உறவுகள் பற்றிய பதிவுகளில் வெளிப்படும் நுட்பமும் கூர்மையும் அவருடைய ஆய்வு சார்ந்த தகவல்களில் காணப்படவில்லை.இரண்டாம் பாகமாக அமைந்துள்ள மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் நூலின் இயல்பு ஓட்டத்தோடு சங்கமிக்க மறுக்கின்றன. நவீன காலகட்டத்தில் மதத்தின் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அறிவியல் கருத்துகளை வளைக்கும் சதிகளுக்கு நமது சூழலில் பஞ்சமில்லை. நூலில் தேவதாஸ் அத்தகைய திரிபுகள் சிலவற்றை சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார்.



முழுமையான அறிவியல் மனம் படைத்தவரின் ஆக்கம் என்ற கூடுதல் தகுதியுடன் வந்துள்ள இந்நூலை அறிவியல் மனப்பான்மையும் பகுத்தறிவு உலகக் கண்ணோட்டத்தையும் பெற விரும்பும் யாருக்கும் பரிந்துரைக்கலாம்.

Sunday, April 4, 2010

விளம்பரங்களில் - செல்வராஜ் ஜெகதீசன்



விளம்பரங்களுக்கிடையில்
வந்து போகின்றன
விளம்பரதாரர் வழங்கும்
நிகழ்ச்சிகள்

நல்லது பயக்குமெனில்
நல்லது கறையென்கின்றன

இன்னுமதிக வெளுப்புக்கு
இவையிவை என்ற
அறிவிப்புகளோடு

இலவசங்களுக்கான
சீசன்களை
எப்போதும்
நினைவுறுத்திக்கொண்டு

விளம்பரங்களில்
வகுபட்டு
பின்னமாகிக் கொண்டிருக்கிறது
பொழுதுகள்.

நினைவின் மணலில் - மதன்



மறுக்கப்பட்ட பரிசுப் பொருட்களை விட
திருப்பித் தரப்பட்ட பரிசுப் பொருட்கள்
கனம் மிகுந்து காண்கின்றன

துணிகளுக்கடியில்...
ஷோகேஸில்...
புத்தகங்களுக்கிடையில்...
எங்கு ஒளித்து வைப்பினும்
அவ்வப்போதைய கண்படுதல்கள்
தவிர்க்கக் கூடியவையாயில்லை

பேனா, கைக்குட்டை, கீ செயின்
போன்றவை பரிசளிக்க ராசியில்லாதவையாம்
திரும்பி வந்த பட்டியலில்
அப்புறப்படுத்த சிரமமில்லாதவையும் கூட

எஞ்சியவற்றை
சிக்னல் பிச்சைகளின்
குளிருக்குக் கொடுத்துவிடலாம்

நினைவின் மணலில் மீதமிருக்கும்
சில தேதிகளும்
வாழ்த்து அட்டைக் குறிப்புகளும்
காலக்காற்றிலழியும் வரை....?

Saturday, April 3, 2010

நித்யானந்தாவிடம் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? - மண்ணுண்ணி



குடுமி போட்ட ஐயங்காரர் மாமா வாயில் இருந்து காலை வேளையில் அதுவும் ஒரு பக்தி நிகழ்ச்சியில் நித்யானந்தாவுக்கான விளக்கம் வரும் என்று நான் எதிர்பார்க்க இல்லை. மேலும் விளக்குவதற்கு முன் சத்தியபிரமாணம் ஒன்று:
நான் விசுவாசியோ அவிசுவாசியோ அல்ல. நித்யானந்தாவின் நடைமுறை ஞானம் மற்றும் லௌகீக சாமர்த்தியத்தின் மீது அபார மரியாதை கொண்டவன்.



விஜய் டீவியில் சுமார் ஏழு மணிக்கு, எச்சில் சாப்பாடு கேட்டு ஜன்னல் திண்டில் காக்கா கரையும் வேளையில், குடுமி மாமா சொன்னது என்னவென்றால்: “ஒருவருக்கு நல்ல குரு அமையாமல் போவது ஒரு நல்ல மனைவி அல்லது நல்ல மகன் அல்லது நல்ல மருகள் அமையாமல் போவது போல். இதற்கெல்லாம் காரணம் முன் ஜென்ம பாவம். நல்ல குரு அமைவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்”.

நான் எவ்வளவு பெரிய பாவி என்பதை உடனே உணர முடிந்தது. ஜெயா டீவியில் ஒரு குடுமி பஜார் சுருதி டான்ஸ் (அதாவது பாட்டின் சுருதி)ஆட பஜனை செய்து கொண்டிருந்தது. குருக்கள் அசுரன் வாமனனை விஷ்ணு பாதாளத்துக்கு அனுப்பின கதையை விளக்கி கொண்டிருந்தார். வாமனனின் கதிக்கு காரணம் அவர் விஷ்ணுவின் கால்களின் சரியான சைஸ் என்ன என்று கவனிக்காததே என்றார் பஜனைத் தலைவர். அதுவும் விஷ்ணு இந்த அளவைப் பற்றி பன்னிப் பன்னி வெவ்வேறு ஸ்தாய்களில் பாடி பாடி சொல்லியிருக்கிறார். ஆனால் பாவம் செய்த வாமனன் நம்ம வகை.attention deficit disorder. பஜனை குழுவில் ஒரு சிறுவன் ஸ்பஷ்டமாக கொட்டாவி விடும் வேளையில் நான் அங்கிருந்து ராஜ் டீவிக்கு வந்தேன். பால் தினகரன் நம்மைப் பிடித்த சாத்தானும், இலவச இணைப்பான பாவங்களும் இப்போதே துரத்தப்படும் என்றார். காலை வேளையில் முன்னணி தொலைக்காட்சிகள் பக்தி மார்க்கம் செல்வதற்கு மக்களின் ஒரு சின்ன செண்டிமண்ட் தான் காரணம் என்று நினைத்திருந்தேன். அதாவது கடவுள் நாமம் நினைத்து, சொல்லி அல்லது கேட்டு ஆரம்பித்தால் அனறைய நாள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை. ஆனால் நடப்பதோ வேறு. பாவி பாவி என்று நினைவுறுத்தப்பட்டு குற்றவுணர்வுடன் நமது மக்களின் காலை வேளை ஆரம்பிக்கிறது.



இதற்கு Ftv-ஏ தேவலாம் போல. Ftv Breakfast-இல் சிகையலங்கராம், முக ஒப்பனை, இமை வரைதல் என வெவ்வேறு உதவியாளர் கரங்கள் தன் மீது ஈடுபட்டிருக்க பிளாக்பெரி நுண்பேசியில் விரல்களால் உலாவியபடி கன்ன எலும்புகள் துருத்தின ஒரு மாடல் சொல்கிறாள்: “இந்த மழைப்பருவ ஷோவுக்காக மூன்று மாதங்களாய் கடுமையாக தயாரித்துக் கொண்டு வருகிறேன்”. இத்தனை வேலைகளுக்கு இடையே பாவமூட்டைகள், பார்ப்பானின் காலடி அளப்பது, குற்றவுணர்வுக்கு எல்லாம் எங்கே நேரம் சொல்லுங்கள்.

பட்டாம்பூச்சி விளைவு (Butterfly Effect)- பிரவீண்


மறை நூலின் சொற்கள் இசைக்கப்பட்டபோது
வரலாற்றின் மீது பறந்து கொண்டிருந்தது ஒரு பட்டாம்பூச்சி।

கரையொதுங்கிய திமிங்கல விழியில்
அகால வானம் நடுக்குற்ற கணம்
நம் உறவின் நாணல்கள்
இறுதியாய் அசைந்தன.

நூற்றாண்டுகளின் புத்தன் தன் தியான விழிகள் திறந்தபோது
நகரின் மையத்தில் அவனைத் துப்பாக்கிகள் குறிவைத்தன

வேனிற் கால இரவு வானை
எரிகல் ஒன்று கிழித்தபோது
யாருடைய காதலோ முறிந்தது

பார்த்தலொமியுவின் கப்பல் நன்னம்பிக்கை முனையைத் தொட்டபோது
கடல்களுக்கு இடையிலான யுத்தங்கள் தொடங்கின

திசை பிறழ்ந்த நோவாவின் புறா
நமது நூற்றாண்டின் மேல் பறந்த போது
உலகம் ஒரு போன்சாயானது.

டினோசர் முட்டைகளில் இருந்து
மனிதர்கள் வெளிவந்தபோது
கடவுளின் இரண்டாம் வருகை நிகழ்ந்தது

ஒளி ஆண்டுகளின் தொலைவில்
யாரும் அறியாமல் ஒரு நட்சத்திரம்
தன் வாழ்வை முடித்துகொண்டபோது
எனது காலை புலர்ந்தது.

நானறியாத வனமொன்றில்
பிரபஞ்ச விழியென மிதக்கும் பட்டாம்பூச்சியே
எனது இன்றைய நாளின் மீது
நீ தூவிய சொற்கள் என்ன.

Friday, April 2, 2010

பனிமுலை படைப்பிலக்கியக் கூட்டம் - ஏப்ரல் இரண்டு 2010



பனிமுலை அமைப்பின் படைப்பிலக்கிய கூட்டம் 20101 ஏப்ரல் ரெண்டாம் தேதி மாலை நான்கு மணிக்கு காந்தி மண்டபத்தில் கலை இலக்கியத்துக்கு உரித்தான தீவிரத்தன்மை மற்றும் எளிமையுடன் நடந்தேறியது. ராஜாஜி, பிரவீன், செந்தில் பாபு, நரன், ரவிச்சந்திரன், பெரியசாமி, ஜெய்கணேஷ், தமிழ்ச்செல்வன், மற்றும் ஆர்.அபிலாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பங்கேற்பாளர்களின் அறிமுகத்துக்கு பிறகு ஆர்.அபிலாஷ் சமகால பிரிட்டிஷ் கவிஞர் ஜார்ஜ் சிர்ட்டிஷின் மறத்தல் மற்றும் அப்பா என்னை வயலுக்கு குறுக்கே ஏந்திப் போகிறார் ஆகிய மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசித்தார். முதலில் மறத்தல் வாசிக்கப்பட்டது. இக்கவிதையின் “சுவர்க்கத்திலிருந்து நீளும் ஒரு கரம்” என்ற வரியில் இருந்து ஆரம்பித்த விவாதம் மேற்கத்திய இலக்கியத்தில் இழந்த சுவர்க்கம் என்பது ஒரு முக்கிய படிமமாக பயன்படுத்தப்பட்டு வருவதை முன்வைத்து மேலும் வளர்ந்தது. கவிதையின் விவரணை அபாரமாக உள்ளதாக பிரவீன் தெரிவித்தார். “உயரத் தூக்கப்பட்டு பத்திரத்துக்கு பிறகு சுழற்றப்படுவதிலா?” என்ற வரியை ஜெய்கணேஷ் சிலாகித்தார். விவாதம் இக்கவிதையில் அம்மா குறித்து வரும் நினைவுக் குறிப்புகளை நோக்கி குவிந்து கொண்டிருந்த போது தமிழ்ச்செல்வன் முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தை கொண்டு வந்தார். இக்கவிதை அம்மாவுக்கும் மகனுக்குமான பாலுறவை குறித்த கவிதை என்றும், இந்த கண்னோட்டத்தில் படிக்கும் போது ஏராளமான ஆற்றல் மிக்க படிமங்கள் கவிதையில் நமக்கு தெரிய வரும் என்று அவர் அழுத்தமாக பேசினார். ஆனால் நரன், பிரவீன் உள்ளிட்ட பெரும்பாலான பார்வையாளர்கள் இதனை மறுத்து பேசினர். நரன் குறிப்பாக ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் தனிப்பட்ட புரிதல் உண்டு; ஒரு ஐரோப்பிய கவிதையில் போரில் இருந்து மீளும் இளைஞன் அம்மாவை கட்டிப் பிடிக்கிறான் என்றால் நாம அதை பாலியல் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றார். பிரவீன் இதனை ஆதரிக்க தமிழ்ச்செல்வன் தான் பண்பாட்டு விழுமியங்களை மறுப்பதாக சொல்லி, அத்தனை மனத்தடைகளையும் தூக்கிப் போட்டு விட்டு இக்கவிதைக்குள் நுழைய வேண்டும் என்று ஆவேசமாக சர்ச்சித்தார். பிறகு விவாதம் மீண்டும் ஒரு மைய புள்ளிக்கு கொண்டு வரப்பட்டு, சிர்ட்டெஷின் அடுத்த மொழியாக்க கவிதை வாசிக்கப்பட்டது. இக்கவிதையை முந்தினதோடு ஒப்பிட்ட பிரவீன் இதில் உள்ள நிலக்காட்சி குறிப்புகள் குறித்து பேசினார். ஜெய்கணேஷ் மறத்தல் கவிதைகள் இத்தகைய நிலக்காட்சி குறிப்புகள் இல்லாததை வியந்து குறிப்பிட்டார். பிரவீன் அடுத்து இக்கவிதையில் அப்பா உணர்வு தளத்தில் அல்லாமல ஒரு மனவியல் தளத்தில் அணுகப்படுவதை குறிப்பிட்டார். ரவிச்சந்திரன் இக்கவிதையில் உள்ள பயணப் படிமத்தை குறிப்பிட்டு பேசினார். அப்போது தமிழ்ச்செல்வன் “வயல்” எனும் உற்பத்திக் களம் எதிர்மறையாக பயனபடுத்தப்பட்டுள்ளதை அவதானித்தார். ஆர்.அபிலாஷ் இக்கவிதையில் தந்தை உருவம் வாழ்வின் அடுத்த கட்ட நகர்வுக்கான கருவியாக சொல்லப் பட்டுள்ளதாக கூறினார்.




அடுத்து நரன் தனது பேரமைதியின் சலனம் என்கிற கவிதையை வாசித்தார். அக்கவிதை அனைவர் இடத்தும் ஒரு ஆழமான அதிர்வை ஏற்படுத்தியது வெளிப்படையாகவே தெரிந்தது. பேரமைதியின் சலனம் முக்கிய பௌத்த உருவகமான தாமரையை பயன்படுத்தி உள்ளதை குறிப்பிட்ட ஆர்.அபிலாஷ் கவிதையில் பிற்பகுதி நிகழ்த்தும் நுட்பமான தாவலை பாராட்டினார். ராஜாஜி நவீன வாழ்வில் சலனங்கள் மற்றும் அமைதி சிக்குண்டு கிடப்பதை இக்கவிதை சுட்டிக் காட்டுவதாக அவதானித்தார். அடுத்து பேசின பிரவீன் இக்கவிதையின் படிம ஆழத்தை பாராட்டியதுடன், தொடர்ந்து இது எல்.ஐ.சி கட்டிடத்தின் மீது நின்று நகர இயக்கத்தை பார்ப்பதான சித்திரத்தை தருவதாக குறிப்பிட்டார். நரனின் கவிதை நூல் எப்போது வெளியாகிறது என்ற கேள்வி பலதரப்புகளில் இருந்தும் எழ அவர் உயிர்மை வெளியீடாக விரைவில் வரப்போகிறது என்றார்.

நரனைத் தொடர்ந்து சா.தேவதாஸின் சார்லஸ் டார்வின்: பரிணாமத்தின் பரிமாணங்கள் என்ற நூல் குறித்த விமர்சனக் கட்டுரை ஒன்றை ராஜாஜி வாசித்தார். டார்வின் பின்நவீனத்துவ தளத்தில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியதை பிரவீன் விளக்கினார். பேச்சில் அவர் சுஜாதாவை ‘தமிழில் சுவாரஸ்ய அறிவியல் துணுக்குகள் எழுதிய ஒருவர்’ என்று குறிப்பிட ஆர்.அபிலாஷ், செந்தில் பாபு மற்றும் நரன் உள்ளிடோர் அதனை கடுமையாக மறுத்தனர். சுஜாதா கராறான அறிவியல் கண்ணோட்டத்துடன் எழுதினார் என்றார் ஆர்.அபிலாஷ். இதனை மறுத்து பேசிய ஜெய்கணேஷ் சுஜாதாவின் நாவல் ஒன்றில் இருந்து அவர் பெண்களை இழிவுபடுத்தி எழுதினதாக ஒரு வசனத்தை குறிப்பிட்டார். அதற்கு அபிலாஷ் சுஜாதாவின் அறிவியல் கறார்த்தன்மை பற்றின விவாதத்துக்கு புனைவுகள் பொருந்தாது என்றார். செந்தில் பாபு சுஜாதாவின் கடவுள் நூல் முக்கியமான புத்தகம் என்றும், அடுத்த கூட்டத்தில் அது குறித்து விரிவாக பேச விரும்புவதாகவும் தெரிவித்தார். சுஜாதா அவர் இயங்கிய வணிக பத்திரிகை எல்லைக்குள் சிறப்பாகவே இயங்கி உள்ளதாகவும், அவரை தீவிர இலக்கிய தரப்பில் இருந்து பார்ப்பது தோதாகாது என்றும் நரன் தெரிவித்தார். அவரை மறுத்த ரவிச்சந்திரன் சுஜாதா உயிர்மையில் எழுதின கண்ணீரில்லாமல் தொடரில் மேலோட்டமாகவே இயங்கியதாக குற்றம் சாட்டினார். அவர் தீவிரத்தன்மை அற்ற அறிவியல் எழுத்தாளர் என்பதற்கு இதுவே சான்று என்றார் ரவிச்சந்திரன். இதனை ஆமோதித்த பிரவீன் சா.தேவதாஸ் போன்றோரைத் தான் நாம் அசலான் அறிவியல் எழுத்தாளர் என்று ஏற்க முடியும் என்றார். காஞ்சி சங்கராச்சாரியார் விசயத்தில் சுஜாதா எடுத்த ஆதரவு நிலைப்பாடு ஒரு அறிவியல் சிந்தனையாளனுக்கு உகந்ததல்ல என்றால் ராஜாஜி. அபிலாஷ் இதனை மறுத்து அரசியல் நிலைப்பாடு அறிவியல் கண்ணோட்டத்துக்கு புறம்பானதாக இருக்க வேண்டும் என்று சொன்ன கருத்து பரவலான மறுப்புக்கு உள்ளானது. சா.தேவதாஸ் சமூகவியல் பரிமாணக் கோட்பாட்டை சாடி உள்ளது குறித்து அடுத்து விவாதம் திரும்பினது.

இறுதிப் பகுதியாக பிரவீன் தனது பட்டாம்பூச்சி விளைவு என்ற கவிதையை வாசித்தார். இக்கவிதை பரவலான பாராட்டை பெற்றது. ஆர்.அபிலாஷ் அரசியல் கவிதையாக தமிழ்ச்சூழலில் இக்கவிதைக்கு முக்கிய இடம் உண்டு என்றார். கூடவே அறிவியல், உலக அரசியல் நடப்புகள் ஆகியவற்றை அகண்ட கால-வெளி பரப்பில் இக்கவிதை வைத்து பேசுவது பாராட்டத்தக்கது என்றார். “டினோசர் முட்டைகளில் இருந்து மனிதர்கள் வெளிவரும்” என்ற வரி எதைக் குறிக்கிறது என்பது பற்றிய முரண்பாடு மற்றொரு தீவிர விவாதத்தை ஆரம்பித்து வைத்தது. ராஜாஜி இக்கவிதையில் பெயரடைகள் ஆதிக்கம் செலுத்துவதாக கூட்டம் முடிந்த பின்னரும் பிரவீனிடம் விசனித்தபடி இருந்தார். இதற்கு பிரவீன் போக்குவரத்தை கடக்கும் புத்தரது போன்றதொரு புன்னகையை தொடர்ந்து மறுமொழியாக்கினார்.

கூட்டம் நிறைவுக்கு வந்தது. திடீரென்று புல்லாங்குழல் இசை பற்றி பனிமுலை இணையதள அறிவிப்பில் குறிப்பிட்டது நினைவு வந்து “பிரவீன் புல்லாங்குழல் எங்கே?” என்றொரு குரல் கேட்க பிரவீன் தலைமறைவானார். குளிர்ந்த பழரசம் அருந்தி அனைவரும் தத்தம் பாதைகள் நொக்கி பயணமாயினர்.

கூட்டம் ஐந்து நிமிடங்கள் தாமதமாக நடந்ததால் மண்ணுண்ணி கோபித்துக் கொண்டு ஆரம்பத்திலேயே வெளியேறி விட்டதாய் பின்னர் தகவல் வந்தது. எடுத்ததற்கெல்லாம் பின்-நவீனத்துவம் பேசும் மண்ணுண்ணி இப்படி நடப்பு வாழ்வில் கட்டுப்பெட்டியான ஒழுக்கவாதியாக இருப்பதை கண்டுபிடித்த பனிமுலை நிர்வாகக் குழு அவரது நடவடிக்கையை கடுமையாக கண்டித்தது. மண்ணுண்ணியை தண்டிக்கும் விதமாக பெசண்ட் நகர் கடற்கரையில் நடைபெற உள்ள பனிமுலையின் அடுத்த கூட்டத்திற்கு மண்ணுண்ணிக்கு தடை விதிப்பதாக அது முடிவு செய்துள்ளது. உடனே அடுத்த கூட்டத்திற்கு தான் ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்து கலகம் செய்யப் போவதாக மண்ணுண்ணி ஒரு அறிவிப்பை செய்ய, அதனை நிர்வாகக் குழு உறுதியாக நிராகரித்து உள்ளது.

கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் பிரபல இணைய பதிவாளர் அதிஷா தனது ஆதரவு மற்றும் வாழ்த்துக்களை நுண்பெசியில் அழைத்து தெரிவித்தார். பனிமுலை என்ற பெயரை வெகுவாக சிலாகித்தார். “ஒரு நாவலுக்கு வைக்க வேண்டிய பெயர் அல்லவா” என்றார். பனிமுலை இணையதளத்தில் தானும் எழுதப் போவதாக அதிஷா உறுதி அளித்தார். அதிஷாவை பனிமுலை ஆசிரியர் குழு வரவேற்கிறது. கூட்டத்தில் வாசிக்கப்பட்ட படைப்புகள் விரைவில் இங்கு பதிவேற்றப்படும்.
- ஆசிரியர் குழு
பனிமுலை