Saturday, April 17, 2010

குஜராத் 2002 வழக்கு- மோடி இழக்க இருப்பது மயிரா தலையா- ராஜாஜி.




பூகோள ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் நெருக்கமான ஈழத்தமிழர் மீதான இன அழிப்பையே மறந்து விட்ட தமிழ்ச் சமூகத்துடன் 2002 ஆம் வருடம் குஜராத்தில் நடந்த இஸ்லாமியர் மீதான படுகொலைகள் குறித்து பேச இயலுமா என்று தெரியவில்லை. மக்களின் இந்தப் பொது மறதி போக, மோடியின் தொடர் தேர்தல் வெற்றிகள் மோடியை அம்பலப்படுத்தி பேசுவோரிடம் ஒரு மன ரீதியான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் படுகொலைக்குப் பிறகான இந்த எட்டு வருட கால வெளியில் மோடியை வேறொரு பரிமாணத்தில் மக்களிடம் கொண்டு செல்ல சில சக்திகள் தீவிரமாக முயன்று வந்துள்ளன. மோடியை வளர்ச்சியின், முன்னேற்றத்தின் உருவகமாகச் சித்தரிக்கும் முயற்சிகள் நிறைவேறின.பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைகாடான குஜராத், கார்பரேட் கம்பெனிகளின் சொர்க்கமாக் கொண்டாடப்படுகிறது. இப்படி தனது எதிர்ப்பாளர்களை வாயடைக்க வைத்த மோடிக்கு குஜராத் 2002 படுகொலை வழக்கு பெரும் சவாலாக இருந்தது, குஜராத் படுகொலை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு , மோடி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியவுடன் ஊடகங்கள் இச்செய்திக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளித்தன. Times Now, NDTV போன்ற ஆளும் வர்க்க விசுவாச ஊடகங்கள் கூட இந்த விவகாரத்தில் ஈடுபாடுகாட்டின.
இந்த சம்மன் மீதான மோடி தரப்பு பதற்றத்தை சற்று எதார்த்த நிலைமைகளுடன் உரசிப் பார்ப்பது அவசியம். திருட்டு , வழிப்பறி போன்றவற்றில் சந்தேக நோக்கோடு அழைத்து செல்லப்படும் அடித்தட்டு வர்க்க இளைஞர்கள் பெரும்பாலும் வீடு திரும்பவதில்லை.. அவர்களின் உடல்கள் பிற்பாடு அரசு மருத்துவமனைகளின் வாயிலாக உறவினர்களிடம் வழஙப்படுகிறது. 2000 முஸ்லிம் மக்களின் படுகொலையோடு தொடர்பு படுத்தப்படும் மோடி அடிப்படை அறத்தின் படி குற்றவாளி. ஆனால் அவர் ஆஜராக ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டது. சட்டத்தின் ஓட்டைகளைக் கண்டுபிடிக்க இந்த அவகாசம் மிகப் பெரியது.எல்லோரும் மோடி ஆஜராக மாட்டார் என்று நினைத்திருந்த நேரத்தில் மோடி வேறு மாதிரி முடிவெடுத்தார். தான் ஒன்றும் சட்டத்தை மதிக்காமல் இல்லை என்று காட்ட ஒரு சந்தர்ப்பமாக மோடிக்கு இது அமைந்தது. மோடியின் இந்தப் போலிப் பணிவை பெரிய அளவிற்கு தம்பட்டம் அடித்தது பா।ஜ.க தரப்பு.

(டீஸ்டா சேதல்வாத்)
எனினும் 9 மணி நேரம் மோடி விசாரிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததே என்று கருதுகிறார் , மோடி மீதான வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றக் காரணமாயிருந்த ‘குடிமக்களுக்கான உரிமைகள்’ அமைப்பைச் சேர்ந்த டீஸ்தா சேதல்வாத் அவ்ர்கள்। சாகச ரசனைக்காக மலிவான எதிர்மறைப் பண்புகளை கதாநாயகனுக்கு அளிக்கும் சினிமா இயக்குநர்களைப் போல அடிப்படை அறத்தின்படி குற்றவாளியான மோடி குறித்து கிளம்பிய சுவாரஸ்யமான தினசரி ஊடகச் செய்திகள் அவருக்கு ஹீரோ இமேஜை அளித்தன. சோர்வும் அலுப்பும் தரக்கூடியதான இந்த நீண்ட மாரத்தான் வழக்கை அச்சுறுத்தல் , அவமானங்களுக்கு அஞ்சாமல் இந்தளவுக்கு நகர்த்திக் கொண்டு வந்த பத்திரிக்கையாளரும் மனித உரிமைப் போராளியான டீஸ்தா சேதல்வாத்தின் பெயர் இந்த ஊடகங்களில் லேசாக முனுமுனுக்கப்பட்டது, அவ்வளவுதான்.உண்மையில் இந்த விவகாரத்தில் மோடியின் மீதான ஊடகங்களின் மிகை வெளிச்சத்தின்முன் சேதல்வாத்தின் செயல்பாடு அமிழ்ந்துபோனது.
ஆர்.ஸ்.ஸ். தனது சோதனைச் சாலைகளாக தேர்ந்துகொண்ட குஜராத் ம்ற்றும் மராட்டியம் போன்ற மாநிலங்களில் அவர்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதான காரிமல்ல. பெரியாரின் பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் ஆர்.ஸ்.ஸ் ஐ எதிர்க்க ஒருவர் பயன்படுத்தும் சொல்லை குஜராத்திலோ மும்பையிலோ நினைத்துப் பார்க்க முடியாது. அவர்களுடைய சமூக உளவியலிலேயெ வலதுசாரித் தன்மை ஊறிப்போயுள்ளது. .ஃபாஸிச உளவியலை மிகச் சாதரணமாகத் தமது சமூகப் பார்வையில் கொண்ட மக்கள், வன்முறைக்குப் பயன்படுத்த தயாராக வைக்கப்பட்டிருக்கும் உதிரி வர்க்கம், மோடியின் மூர்க்கத்திற்கு முன்னர் அடிபணிந்த ’நியாயவான்கள்’ ரத்தன் டாடா, அமிதா பச்சன் போன்ற கனவான்களின் ஆதரவு என இந்தப் பட்டியல் மலைப்பைத் தரும். இதற்கு மத்தியில் கோலியாத்தை வீழ்த்திய தாவீதைப் போல ஒன்பது மணி நேர விசாரனைக்கு நடுவில் மோடியை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளிடம் சிறுநீர் கழிக்க அனுமதி வாங்க வைத்த டீஸ்த்தா சேதல்வாத் ஒரு நிஜ நாயகி.
26/11 என்று நாமகரணம் சூட்டப்பட்டுள்ள அஜ்மல் கசாப் மீதான விசாரனை முடிவு பெற்று தீர்ப்பு விரைவில் வெளிவர இருக்கிறது। மரண தண்டனை என்பது கிட்டத்தட்ட அவருக்கு உறுதியாகியுள்ளது। 60 பேரை கொலை செய்த குற்றத்தில் பங்குபெற்ற கசாபிற்கு மரண தண்டனை எனும்போது 2000 முஸ்லீம் மக்களை கொடூரமானமுறையில் வெட்டியும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியும் கொலை செய்த மனித குல விரோதிகள் தண்டிக்கப்படுவதில் ஏன் தாமதம் என்று அறவியல் சார்ந்து எழும் கேள்விக்கு இந்திய குற்றவியல் சட்டம் பதில் வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. கசாப்பிடம் கையாளப்பட்ட நார்க்கோ அனாலிஸிஸ் மற்றும் வேறு பல கொடிய விசாரனை முறைகளில் மோடி விசாரிகப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

ஆர்.ஸ்.ஸ் பின்னிருந்து இயக்கும் பல்வேறு வன்முறைகளில் தண்டிக்கப்பட்டவர் என்று எவருமில்லை. பாபர் மசூதி இடிப்பு வழக்கு இன்னும் ஆரம்ப நிலையிலேயே நொண்டிக்கொண்டிருக்கிறது. 93- மும்பை வன்முறை தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் இன் வன்செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த சிறீ கிருஷ்னா கமிஷன் அறிக்கையோ, ஆர்.ஸ்.ஸ் இன் குண்டு வெடிப்பு பிரிவான ‘அபினவ் பாரத்’ , அமைப்பை விசாரித்து வந்த ஹேமந்த் கர்க்க்கரேவின் கொலைக்கு பின்னர் மண்ணிலே புதைக்கப்பட்டுள்ளது. பிரவீன் தொகாடியா, பிரமோத் முதாலிக் போன்ற காவி உடை தரித்த கிரிமினல்கள், செல்லுமிடங்களில் எல்லாம் வன்முறைத் தீயை பற்ற வைக்கின்றனர்.ஒரிசா கிறிஸ்த்தவ பழ்ங்குடிகள் இன்னமும் தமது சொந்த இருப்பிடஙளுக்குத் திரும்ப முடியவில்லை. கர்னாடகத்திலும் சிறுபான்மைனருக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. கிறித்தவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடந்தேறுகின்றன.. குடிமைச் சமூகம், பத்திரிக்கைகள், அரசு, போலீசு , நீதித்துறை ஆகியவற்றை சாட்சியாக வைத்தே இக்குற்றங்கள் அனைத்தும் நடந்துள்ளன. இக்குற்றஙகள் யாவும் எல்லோரும் அறிய பொதுவெளியில் நிகழ்த்தப்பட்டவையே.

இந்த குறிப்பிட்ட வழக்கும் பெரிய நம்பிக்கையைத் தரவில்லை. முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜாஃப்ரியின் கொலை வழக்கில் அரசின் மெத்தனப் போக்கு கவனிக்கத்தக்கது. மோடி மீது இன்னமும் ஒரு f.i.r. கூட பதிவு செய்யப்படவைல்லை. சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைமை அதிகாரி ஆர்.கே.ராகவன் கூற்றுப் படியே கூட, எதிர்காலத்தில் f.i.r. பதிவு செய்யும் அதிகாரம் சி.பி.கு வுக்கு இருக்கிறதா என்பதில் தெளிவில்லை. இந்த வழக்கு உட்பட குஜராத் படுகொலை வழக்குகள், அரசின் மெத்தனம் என்ற திசையில் செல்லுமானால் அதிக பட்சமாக மோடிக்கு சி.பி.கு. வின் மோதிர விரல்களால் குட்டு மட்டுமே கிடைக்கும். அது டான்ஸி நில மோசடி வழக்கில் ஜெயலலிதாவிடம் மனசாட்சி படி நடந்திருக்கலாம் என ஆலோசனை வழங்கிய நீதிமன்ற ஆணையின் வலிமையைத்தான் ஒத்திருக்கும். சாக்கியா ஜாஃப்ரி போன்று உறவுகளை இழந்த எண்ணற்றவர்களின் பிரார்த்தனை, டீஸ்த்தா சேதல்வாத் போன்ற மனித உரிமை செயல்பாட்டாளர்களின் விடாமுயற்சி, நாடெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் ஏக்கப்பெருமூச்சு , கவித்துவ நீதியின் மீது இயல்பான நாட்டம் கொண்ட எளிய மக்கள், என்று அனைவரின் குவிமையமாக இருக்கும் குஜராத் படுகொலை வழக்குகள் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கு ஒரு அமிலச் சோதனையாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment