
பயணக் களைப்பாய்
இருக்கலாம்.
போய்வரும் இடத்தில்
நேர்ந்த உறவைப்
பிரிந்ததால் இருக்கலாம்.
எதிர்கொண்டழைக்க
எவருமற்று காணும்
புது இடம் குறித்த
மிரட்சியாய் இருக்கலாம்.
ஏக்கமும் சோகமும்
கொண்டு எதிர்பட்டவனை
நோக்கி இதழ்க்கோடியில்
தவழ விட்டேன்
புன்னைகையொன்றை.
சற்றே சலனம் காட்டி
பின் சமாளித்து
போய்க்கொண்டிருந்தவன்
நினைத்திருக்கக்கூடும்
ஏதும் என்னைப் பற்றி.
இறுக்கிப் பிடிக்கும்
வாழ்க்கையில்
இன்னொரு முகத்தின்
சோகத்தை இம்மியாவது
இடம்பெயர்க்க
முடிந்ததென்ற
நிம்மதி எனக்கு.
இதையும்

இன்னும் சற்று மேம்பட்டதாக
இன்னும் சிறிது சுரத்துள்ளதாக
இன்னும் கொஞ்சம் உவப்பானதாக
இன்னும் எப்படியெல்லாமோ
இருந்திருக்கலாம் என்கிறீர்கள்.
இந்த ஒரு சிறு வாழ்வில்
இந்தளவாவது இயன்றதே என்கிறேன்.
இதையும் எப்படியாவது புரிந்து கொள்ளுங்கள்
ஏனைய பிற யாவற்றையும் போல.
No comments:
Post a Comment