Tuesday, April 13, 2010

மூன்று பேர் புலியைப் பார்க்க போகிறார்கள் - மாதவி



மூன்று பேர் புலியைப் பார்க்க போகிறார்கள்

மூன்று பேருமே நிஜப் புலி பார்த்திராதவர்கள்

மூன்று பேருமே புலியின் கோடுகள் குறித்த விசித்திர கற்பனைகளும் தகவல் அறிவும் கொண்டவர்கள்

மூன்று பேருமே ... (ஒன்றும் இல்லை)

மூன்று பேரில் ஒருவன் கோட்டோவியங்களில் பழகியே புலியுடன் சினேகமாவன்

இரண்டாமவன் கார்டூன்களிலும் ஊர்வலப் பதாகைகளிலும் புலியுடன் பரிச்சயமானவன்

மூன்றாமவன் குறைந்து வரும் புலி எண்ணிக்கை குறித்த தீவிர அக்கறை கொண்டவன்

முதலாமவன் புலியைப் போன்றே நடக்க, ஓட, பாய, பதுங்கத் தெரிந்தவன்

இரண்டாமவன் புலியைப் போன்றே கர்ஜிக்கவும், புலியைப் போலல்லாது பேசவும் தெரிந்தவன்

மூன்றாமவன் புலிகளின் அங்கீகாரமற்ற தகவல்களஞ்சியம், கூட்டியும் குறைத்தும் பலவாறாக புலி எண்ணிக்கையே வெளியிடுவதே புலி இனத்தை காப்பாற்ற நல்ல வழி என்று நம்புபவன்

முதலாதவன் ...இரண்டாதவன் ...மூன்றாதவன் ...குறித்து மேலும் எந்த தகவலும் இல்லை

அவர்கள் அசல் புலியை பார்க்க போனார்கள் என்பதைத் தவிர

மிருகக் காட்சி சாலையிலிருந்து திரும்பின

முதல் மற்றும் இரண்டாமவனுக்கு பின்னால் குதத்தில் புலி வால் ஆடியது

புலியை மிக நெருங்கி பேசியதால் அது பரிசளித்தது என்று பேசிக் கொண்டார்கள்

மூன்றாமவன் திரும்பவே இல்லை

அவனை யாரும் பிறகு பார்க்க இல்லை

கண்காணா இடத்தில் இருந்து இதை அவன் எழுதிக் கொண்டிருப்பதாக

கடைசியாக வந்த தகவல் தெரிவிக்கிறது

கூண்டுக்குள் இருந்தது நிஜப்புலியே அல்ல புலி எண்ணிக்கையில் இதனால் ஒன்று குறைந்து விட்டது

என்பதை அவன் கவிதையின் சேதியாகவும் உத்தேசிக்கிறான்

வால் முளைத்தவர்களை எந்த எண்ணிக்கையில் சேர்ப்பது என்ற குழப்பம் காரணமாய் அவன் தன் கவிதையை முடிக்காமலே வைத்திருக்கிறான்

ஆனாலும் ஒன்று குறைந்தால் ஒன்று கூடும் என்ற தன் சூத்திரம் நிரூபணமானதில் அவனுக்கு மகிழ்ச்சியே

No comments:

Post a Comment