Thursday, July 1, 2010
கதவுகளற்ற வீடு - ஆர்.அபிலாஷ்
வாசலின் குறுக்காய் தூங்க பிரியப்படும் பூனை
கதவுகளை மூடப் போவதாய் மிரட்டினாலோ
பலம் பிரயோகித்தாலோ
அன்றி
இரு திசைகளில் ஒன்றை
தேர்ந்திட விரும்புவதில்லை
பீரோவுக்குள் இருந்தால் வாலும்
அலமாரிக்கு வெளியே காலும்
ஜன்னல் வழி வானத்துக்கு முகமும்
தரும்
பூனை என்றோ
ஒரே பெயராலோ
அழைக்கப்பட விரும்பாத அது
வித வித மாற்றுப்பெயர்களை விரைவில் வெறுத்து
முதலில் அழைக்கப்பட்டதை இறுதியாய் தேர்வு செய்கிறது
இரண்டு வித உணவுகளில்
முதலில் தந்த உணவை கடைசியிலும்
கடைசி உணவை முதலிலும்
உண்ண முனைகிறது
செய்தித் தாள் மேல் படுத்து
டி.வியை வெறிக்கும் அது
சானல்கள் இரைச்சலுடன் மாற்றப்படும் போது
மும்முரமாகிறது
ஒருநாள்
மூடப்படாத ஜன்னல்கள் கொண்ட
மாபெரும் அறை ஒன்றினுள்
தாவி இறங்கி
வாசலை தேடியது
அது வெட்டவெளி என்பதை உணராமல்
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment