Sunday, July 4, 2010

மாமல்லன் கார்த்தி கவிதைகள்











என் நகர்புறத்து மஞ்சள் இரவில்
ஒரு கோவில் திருவிழாவின் தெய்வீக ஓலம்
மிரண்டோடி வந்த
நாய்கள்
என்னை விநோதமாய் பார்த்தன
***********************************

அவள் பொம்மைகளை நேசிக்கத் துவங்கிய நாள் எதுவென்று அறிந்திருக்கவில்லை
நினைவில் தங்காத ஏதோ ஒரு நீண்ட தனிமையைத் தாழிட்டுக்கொள்ள
பொம்மைகளை நாடியிருந்தாள்
முதிர் கன்னியின் உடல் வாகும்
முதிராத உள் மனமும் கொண்டிருந்தாள்
பொம்மைகளோடு பேச முடிந்ததும்
முத்தமிட்டு விளையாட முடிந்ததும்
புரண்டு படுத்து அனைத்துக் கொள்ள முடிந்ததும்
இறுகிச் சிதறும் மௌனங்களில் கட்டி அழ முடிந்ததும்
அவளுக்கு பெரும் ஆசுவாசம் தந்தது
மூப்படையாத, எதிர்த்துப் பேசாத
பொம்மைகள்
மனித உறவுகளை விட மேலானதாக எண்ணினாள்
மயங்கிக் கிடந்த
மாலைப் பொழுதொன்றில்
என்னையும் பொம்மைகளோடு சேர்த்துக் கொண்டாள்
சிரிக்கும் பொம்மைகளை பார்த்துப் பழகி இருந்தவள்
கண்ணீர் விடும் பொம்மைகளை கண்டதில்லை
பரவசம் கொண்டு குதித்துக் கை தட்டினாள்
பொம்மைகளின் உலகத்தில்
நான் தான் தலைவன்
என்று சொல்லி கருணை முத்தமொன்றை அளித்தாள்
cinemams@gmail.com

No comments:

Post a Comment