Saturday, March 27, 2010

கவிதைகள் - பிரவீண்

*1

இந்த பனி இரவில் அவன் ஏற்றிருக்கும் பாத்திரம்
தானியங்கி பணம் வழங்கும் எந்திரத்தின் பாதுகாப்பாளன்.
நூறு பயணங்களுக்குப் பிறகு வாழ்வின் ஒரு புள்ளியில்
அவன் வந்து நிற்கும் இடம்.
நீண்டிருக்கும் இந்த இரவு அவன் மன நிழல்தான்.
இரவைப் போலவே
அவன் மனவெளியெங்கும் படிந்துளது ஊமைப் பனி.
நடுத்தர வயதுப் பருமனில் சீருடையின் அன்ன்ியத்தொடு
ராணுவ மிடுக்கில் நிற்பது
காலம் அவனுக்குப் பரிசளித்த அங்கதம்.
குளிரூட்டிய கண்ணாடி அறையின் பகட்டான ஒளியில்
ஏடிஎம் எந்திரம் வாழ்ந்து வரும்
சீறலற்ற தட்டையான வாழ்க்கையின்மேல்
அவனது சாயல் படிந்திருப்பதை மறுப்பதற்கில்லை.
இரவுக்குள் ஒரு வெள்ளை நிறக் கார் வந்திறங்க
காதலர் போன்ற இருவர் வெளிப்படுகின்றனர்.
அவளின் பளிச்சிடும் ஒப்பனையும் பர்ஃப்யூம் மணமும்...
தொலைந்த பருவத்தின் நீரோடை துளிர்க்க
ஒரு கவித்துவ கணத்துக்குள் அவன் தடுமாறுகிறான்.
மீளுகையில் அவனுக்குள் எஞ்சுவது
ஒரு எளிய வர்க்க சீறல் மட்டுமே.
அவர்கள் சென்றுவிட்ட வெற்றிடத்தில்
இரவு மேலும் அட்ர்த்தி கொள்கிறது.
ஏடிஎம் எந்திரத்தை கண்கள் சந்தித்தபோது
மேலும் அது அவனை உறுத்து நோக்கத் தொடங்கியது.
- - - - - - -
*2
எதுவித கருத்துமற்று பெய்துகொண்டிருக்கிறது
நேர்த்தியாக சம்பிரதாய மழை.
மிகுந்த ஒழுங்கமைவுடன் அறைச் சுவரில் நீண்ட பாதைகளை வரைகின்றன
பருவகால எறும்புகள்.
அனைந்த நிலையில் தொலைக்காட்சியின் பிம்பங்களற்ற திரைக்குள்
யுத்தங்கள் துயில் கொள்ளும் இக்கணத்தில்
காலம் ஒரு புகைப்படம் போல் தொங்குகிறது.
எதிரே உன் வாசலில் நின்றபடி சூழலின் போதமற்றுப் பேசிக்கொண்டிருக்கிறாய்
கைப்பேசியில் வெகு நேரமாய்.
மறுமுனை பற்றிய என் கற்பனைகள்.
உன் அந்தரங்கம் ஊடுருவி நான் விழையும் கிளர்ச்சி, தன்னிரக்கம்.
ஈர மரங்களில் கிளரும் மரபான வாசம்
உனக்கு என் ரகசிய பரிசு.
இன்றைக்கான தானியங்களை சேகரிக்க
இன்னும் நான் தயாரகவில்லை.
காற்றிலும் காலத்திலும் இன்று சலனங்கள் இல்லை,
எதுவித கருத்துமற்று
நமக்கிடையில் பெய்துகொண்டிருக்கிறது
மிகவும் அலுவல்பூர்வமான சம்பிரதாய மழை.
உரையாடலுக்கு லாயக்கற்ற மழை.

1 comment:

  1. வித்தியாசமான சிந்தனை, கருமனிதர்

    "மீளுகையில் அவனுக்குள் எஞ்சுவது
    ஒரு எளிய வர்க்க சீறல் மட்டுமே."

    மிகப் பெரிய விடயம் இந்த இரு வரிகளுள் புதைந்திருக்கிறது. நல்ல கவிதைக்கு நன்றி.

    ReplyDelete