அவர்கள் வேறொரு காலத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒரு புள்ளியிலிருந்து மறு புள்ளிக்கானது அவர்களது பயணம்.
அவை எதையும் இணைப்பதில்லை.
ஒரு நதியின் கோடையிலிருந்து அதன் பிறிதொரு பருவத்திற்கு
கனிகளின் மௌனத்திலிருந்து இலைகளின் விளையாட்டிற்கு
தன்னிச்சைகளின் ஒரு திசையிலிருந்து பிறிதொரு திசைக்கு
பல சுழல்கள் கொண்டது அவர்கள் பயணம்.
அவர்கள் பிரக்ஞையில் வரலாறோ மொழியோ கிடையாது.
நட்சத்திர ஒளியின் காமம் மலர்ந்த இரவுகளும்
அதிகாலையில் கவித்துவம்கொள்ளும் மரங்களுமே
அவர்களின் மனப்படிமங்கள்.
அரிதாக அவர்களைக் கடந்து செல்லும்
நீல இறகுப் பறவைகள் அவர்களின்
நன்னிமித்தங்கள் ஆகி வருகின்றன.
பிரபஞ்சத்தின் ஒரு மௌனப் புள்ளியில்
திரளாக அசைந்து செல்கிறார்கள்
வேறொரு காலத்தின் தொலைவிலிருந்து
வேறு விழிகளால் கவனிக்கப்படுவதையோ
வேறு மொழியால் வாசிக்கப்படுவதையோ
அவர்கள் அறிவதில்லை.
இன்னும் பிறக்காத ஒரு மொழியின் முதற் படிமங்கள்
அவர்களுக்குள் வெடிக்கும்போது
புதிய உன்மத்தமும் கிறுக்கும் பிடிக்க
அவர்களது காலம் உடைந்து போகலாம்.
தற்போது
சூரியன் அத்தமிக்கும் மலை முகட்டின் பின்னணியில்
நகர்ந்து கொண்டிருக்கும் சிறிய கருங்கோடு
அவர்கள்தான்
வசீகர மொழி - ஆர்.அபிலாஷ்
ReplyDelete